தலைநகர் வீழவில்லை.. கீவ் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது... உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
கீவ்: ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது வியாழக்கிழமையன்று வான்வளி தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. மூன்றாவது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது போர் தீவிரமானதால் பெரும் பதற்றம் எழுந்திருக்கிறது.
உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

3வது நாளாக போர்
ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதலை, துணிச்சலுடன் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இன்று 3வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தங்களுக்கு உதவுமாறு உலகத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார். 27 நாடுகளின் தலைவர்களிடம் பேசியதாகவும், ஆனால் யாருமே பதிலளிக்கவில்லை என்றும், ரஷ்யாவுக்கு எதிராக தனித்து விடப்பட்டிருப்பதாகவும் நேற்று அவர் உருக்கமாக பேசியிருந்தார்.

உதவிகோரிய ஜெலன்ஸ்கி
நேட்டோ உறுப்பு நாடான பிரான்சிஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதையடுத்து ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள 300 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

பிரான்ஸ் உதவி
அதன்பேரில் உடனடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் பேசியதாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வதந்திகளை நம்ம வேண்டாம்
ரஷ்யா உக்ரைனின் ராணுவ மையங்களை அழித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. முதல் நாளின் போதே 200க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், அச்சத்தில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்து வருவதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் கூறியது. ஆனால் உக்ரைன் அரசு அதனை முழுவதுமாக மறுத்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

போருக்கு அழைப்பு
நாட்டு மக்களில் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கிறதோ நாட்டைப் பாதுகாக்கவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதம் வாங்கிக் கொள்ள உக்ரைன் அரசு அனுமதியளித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. போருக்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விட்டுக்கொடுக்க மாட்டோம்
அவ்வப்போது வீடியோ வெளியிட்டு மக்களிடம் பேசி வருகிறார் அதிபர் ஜெலன்ஸ்கி. நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை. நான் இங்கே தான் இருப்பேன். எங்கேயும் ஓடிவிட மாட்டேன். எனக்கு ஆயுதங்கள் தான் தேவை. தப்பியோடும் பயணம் அல்ல. எந்தச் சூழலில் நாட்டையும் நாட்டு மக்களையும் விட்டுக்கொடுக்க போவதில்லை. தீர்க்கமாக சொல்கிறேன். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

ஆயுதங்கள் வழங்க தயார்
தலைநகர் கீவை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக செய்தி வெளியாகவே அதையும் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். சற்று முன் வெளியிட்ட வீடியோவில் ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் திட்டத்தை தாங்கள் முறியடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் அதிபர் வீடியோ மூலம் பேசியுள்ளார். நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications