ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்ற.. 92 வயதில் மீண்டும் அரசியல் களம் புகுந்து சாதித்த மகதீர் முகமது!
Recommended Video
கோலாலம்பூர்: அரசியலில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு மீண்டும் 92 வயதில் களமிறங்கி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார் மலேசிய முன்னாள் பிரதமர், மகதீர் முகமது.
மலேசிய நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஆளும் Barisan Nasional (BN) கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. மகதீர் முகமது, தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதன் மூலம், பிஎன் கூட்டணி கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
22 வருடம் ஆட்சி
1981ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டுவரை 22 வருட காலம் தொடர்ச்சியாக, மலேசிய பிரதமராக பதவி வகித்தவர்தான் இந்த மகதீர் முகமது. பொருளாதார பின்னடைவில் இருந்த மலேசியா, ஆசியாவின் முக்கிய பொருளாதார முன்னேற்ற நாடுகளில் ஒன்றாக மாற்றம் பெற்ற காலத்தில் இவர்தான் பிரதமர்.
நவீனத்தின் தந்தை
இதன் காரணமாகவே, மகதீர் முகமது, மலேசிய நவீனமயமாக்கலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1998ம் ஆண்டு ஆசிய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தபோதும் கூட மலேசியாவை சிறப்பாக வழி நடத்தி, இப்போது பொருளாதார புலி என்ற பெயரை அந்த நாட்டுக்கு ஈட்டித் தந்துள்ளார். பிரதமராக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
துறவரம் நிறைவடைந்தது
ஆளும் கட்சி அடங்கிய ஐக்கிய மலேசிய தேசிய கூட்டமைப்பில் இருந்து, 2016ம் ஆண்டு விலகிய மகதீர் முகமது, எதிர்க்கட்சி கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2009ம் ஆண்டு முதல் மலேசிய பிரதமராக உள்ள நஜிப் ரசாக்கை தோற்கடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுதான் தனது அரசியல் துறவரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் களம் கண்டார், மகதீர் முகமது.
கடும் குற்றச்சாட்டுகள்
பல கோடி மதிப்புள்ள ஊழல் புகார்கள் நஜீப் ரசாக் அரசை 2015 முதல் துரத்தி வருகிறது. "அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மலேசியாவை பின்னுக்கு தள்ளிவிட்டார். உலகம் முழுக்க கெட்ட பெயரை ஈட்டியுள்ளார். எனவே அவர் வெளியேற வேவண்டும். ஒருவேளை அவர் பிரதமராக இருந்தால் நாய்களின் கைகளுக்குத்தான் நாடு போய் சேரும்" என்று நஜீப் பற்றி மக்கள் மத்தியில் முழங்கினார் மகதீர் முகமது.
சர்வாதிகார பாணி
இருப்பினும் மகதீர் முகமது ஆட்சி காலத்தில் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தியதாக ஒரு விமர்சனம் இருப்பதை மறுக்க முடியாது. அரசியல் எதிரிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிகையாளர்களும் கூட. ஆனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என இப்போது மகதீர் முகமது உறுதியளித்துள்ளார். ஆனால் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என்றும் உறுதியாக அவர் கூறியுள்ளார்.