Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நான் பேசியது இதுதான்... கமல் #Naalainamadhe

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேச்சு- வீடியோ

    வாஷிங்டன்: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கமல் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பங்கேற்று பேசினார்.
    நிகழ்ச்சி அரங்கத்தில் கமல்ஹாசன் வேட்டி, சட்டையில் வரும்போது "தலைவர் வாழ்க" என மாணவர்கள் முழக்கமிட்டனர்.

     What i have spoken in Harvard University is this, says Kamal

    அப்போது ரஜினியின் அரசியல், அவரது அரசியல், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் என பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். மேலும் நான் என்ன செய்யவேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது என்று மாட்டு இறைச்சி தடை விவகாரத்தை மனதில் வைத்து மத்திய அரசை விமர்சனம் செய்தார்.

    கமல் அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசியிருந்தார். அவர் தமிழில் என்ன பேசினார் என்பதை மக்களுக்காக மொழிபெயர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கூறுகையில், வணக்கம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம் குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச் செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! நாளை நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த இணைப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    பாரம்பரியம், கலாச்சாரம், மூத்தமொழியான தாய்த்தமிழ் கட்டடகலையின் முன்னோடி சமூகநீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி என பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    வெவ்வேறு விதமான கிராமங்களை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதில் எனக்குப் பெருமை உண்டு. ஆனால் தற்போது அங்கே அனைத்தும் சீராக இல்லை, இன்னும் காலம் கடக்கக் கூடாது என்ற தொலைநோக்கோடு உறுதியான குறிக்கோளோடு புத்துலகம் காண வேண்டுமென விரைவில் அரசியல் பயணம் புறப்படவிருக்கிறேன்.

    என்னுடைய உண்மையான நோக்கம் சாதாரண நிலையிலுள்ள தமிழகத்தின் நிலையை மாற்றிக் காட்டுவதே ஆகும். ஏன் என்றால் அங்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்களில் பலர் தெளிவற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாக உள்ளனர் எனக் கருதப்படுகிறது.

    தமிழகத்திற்கு தக்க அணுகுமுறையோடு கூடிய வழிகாட்டுதல் அவசியமாகிறது. இதை ஒட்டியே எனது நோக்கமும் அமைந்துள்ளது. அங்கு கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகள் திருத்தப்படுவது முக்கியமாகும்.

    குறிப்பாக தமிழகத்தில் அரசியல்வாதிகள் போக்கு மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கிறது. மாநிலத்தின் மொத்த வருவாய் நிலை பற்றாக்குறையாக உள்ளது. 2016-2017-ஆம் ஆண்டில் அகில இந்திய நிலையில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. இதற்குக் காரணம் அரசின் வீணான செலவுகள், திட்டமிடாத நிதிச்சுமைகள், தொலைநோக்கோடு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப்போக்கு ஆகியவை ஆகும்.

    மேலும் தமிழகத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக பல்லாண்டுகளாக நீர்நிலைகளை சீரமைக்காமல் ஒதுக்கியதால் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்க வேண்டியுள்ளது. நீர் நிலைகளைத் தூர்வாரி தண்ணீரை சேமித்தாலே நமது தேவைகள் பூர்த்தியாக வாய்ப்புண்டு.

    கல்வி, மக்கள் நலன் காத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தல் என்பது உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் தன் கடமையைச் சரியாகச் செய்ததா என்பது கேள்விக் குறியே.

    இத்தகைய சூழலில் எனது தாயகம் குறித்த எனது கனவை நனவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருக்கிறேன். இது புதிய பாதையல்ல. மூத்தோர் பலரும் முயற்சித்ததைப் புதிய தலைமுறையோடு இணைந்து வடிவம் கொடுக்க தயாராகி வரும் சூழலில் இங்கு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும், ஒரு நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்கள் சீரமைப்பையே மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் உருவாவது தேசத்தையே மறுகட்டமைப்பு செய்வதாகும் என எனது வழிகாட்டியும், நாடே போற்றக் கூடிய மாமனிதருமான அண்ணல் காந்தியடிகள் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதை மனதில் ஏந்தி பிப்ரவரி 21-ஆம் தேதி எனது அரசியல் பயணத்தை "நாளை நமதே" என்ற இலக்கோடு தொடங்கவிருக்கிறேன். இதற்கு முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை ஒட்டுமொத்த வளர்ச்சி கொண்டதாக மாற்ற தத்தெடுப்பதை அறிவிக்கவிருக்கிறேன்.

    இவ்வாறு தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளது. வளமிருந்த சமூகக் கட்டமைப்பு உருவாக அனைத்து வசதிகளும் அவசியம். இதற்கான செயல்பாடு மாற்றத்தை நோக்கியே என்ற அணுகுமுறையோடு இருக்கும்.

    ஒவ்வொரு பயணத்திலும் எடுத்து வைக்கும் முதல் அடி மாற்றத்திற்குத் தூண்டுகோலாக அமையும் என்பது என் அனுபவம். கிராமத்தில் தொடங்கி மாநிலத்தை எட்டி பின்னர் காலப்போக்கில் இந்தியாவிற்கு இத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதே எனது நோக்கமாகும்.

    இத்தகைய மகத்தான செயல்பாட்டிற்கு உலக நிலையில் பரவியுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை, திட்டங்களை வழிகாட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு நான் கூறுவதால் ஏதோ உங்களிடம் நிதி கேட்பதாகக் கருதிவிடாதீர்கள். அதைக் காட்டிலும் மேலான மதிப்புமிகுந்த உங்களின் யோசனைகள், தனித்தன்மை கொண்ட உங்களின் கற்பனைகள் எங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இதையே நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பயணம் ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவ- மாணவியர் வாழ்த்துகளோடு அவர்கள் அறிவாற்றல் ஆதரவோடு தொடங்கவிருப்பதில் மகிழ்கிறேன்.

    உடனடி செயல்பாடே உரிய பயனைத் தரும் என்பது எனது உறுதியான நம்பிக்கை நாற்காலியில் அமர்ந்து அரசியல் பேசுவது அலங்காரமாக இருக்கலாம், அது ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு உதவாது.

    தேர்தல் அரசியல் எங்களை எதிர்நோக்கி உள்ளது, அதன்மூலம் தான் இந்த சமூகத்திற்கான கடமையைச் செய்ய முடியும். செயல்படாத அரசை நம்புவதைக் காட்டிலும் நல்ல அரசை உருவாக்குவது எனது உரிமை என்பதே இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும்.

    இது எனது அரசியல் பயணத்தின் முன்னோட்டப் பேச்சாகும். அடுத்தகட்டமாக எனது மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். என்னை ஒரு செயல்படக் கூடிய நபராகக் கருதி நீங்களெல்லாம் கூர்தீட்ட வேண்டும். தமிழக கிராமங்களுக்கு மறுவடிவம் கொடுக்க உங்கள் அனைவரின் உதவிகள் அவசியம்.

    என்னை அரசியல்வாதியாகப் பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறது, புதிய மாறுதலுக்கு செயல்வடிவம் கொடுக்கும் சீர்திருத்தவாதியாகவும் செயல்படுகிறேன். பழம்பெருமை மிக்க எங்கள் தாயகத்தை ஆட்சி செய்த அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்வாகம், மொழி காத்தலில் முன்னோடியாகத் திகழ்ந்ததை இப்போதும் நினைத்து நாம் பெருமைப்படலாம். அவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த யோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகள் இப்பொழுதும் நமக்குப் பயன்படக் கூடியவை. ஆனால் தற்போதைய தலைவர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வார்களா என்பது விடையில்லா வினா.

    வெற்றி, தோல்விகள் வரலாம். சமூக அரசியல் காலஓட்ட மாற்றத்தில் இவையெல்லாம் நமது செயல்பாட்டிற்கான குறியீடுகளாகும். தொலைநோக்கோடு நான் தொடங்கவிருக்கும் இந்த அரசியல் பயணத்தில் நிறைய கற்றுக் கொள்ளவிருக்கிறேன். என் பயணத்தில் உணைந்து தமிழகத்திற்குப் புது வடிவம் கொடுக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

    "நாளை நமதே" என்ற பயணத்தின் முடிவு எதிர்காலத்தில் மாறுபட்ட உயர்ந்தத் தமிழகத்தை நமக்குக் காட்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+