மலேசிய விமானம் எங்கு தான் உள்ளது?, என்ன தான் ஆனது?: 19 சாத்தியங்கள்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும், அல்லது எங்கு இருக்கும் என்பது தான் உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த 8ம் தேதி கிளம்பிய விமானம் மாயமானது. அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தார் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விமானம் எங்கு இருக்கக்கூடும் அல்லது அதற்கு என்ன ஆகியிருக்கக்கூடும் என்று பார்க்கலாம்.
கடத்தல்
விமானம் கடத்தப்பட்டு ஏதாவது ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். அதை வைத்து பின்னர் பயனடைய நினைத்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதையே தான் எஃப்.பி.ஐ. துணை இயக்குனர் ஜேம்ஸ் கால்ஸ்ட்ராமும் தெரிவித்துள்ளார்.
கடலுக்குள் விழுந்தது
விமானத்தை கடத்தி ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் எரிபொருள் தீர்ந்து போய் விமானம் கடலுக்குள் விழுந்திருக்கலாம். ஆனால் அப்படி விழுந்திருந்தால் உடைந்த பாகங்கள் கிடைத்திருக்க வேண்டும். இருப்பினும் விமானம் கடத்தப்பட்டது என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் விமானம் இந்திய பெருங்கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்று சி.என்.என். செய்தி தொலைக்காட்சி கருதுகிறது.
வேண்டும் என்றே
விமானத்தை கடத்தியவர்கள் அதை வேண்டும் என்றே அதிவேகமாக கீழ்நோக்கி ஓட்டி கடலுக்குள் பாய வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விமானி
கடந்த மாதம் எதியோபிய ஏர்லைன்ஸ் விமானத்தை அதன் விமானியே கடத்தினார். அதே போன்று மலேசிய விமானத்தின் விமானிகள் அல்லது விமானி அதை கடத்தி ரகசிய இடத்தில் வைத்திருக்கலாம்.
சைபர் கடத்தல்
ஹேக்கர்கள் யாராவது மலேசிய விமானத்தின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து அதன் வேகம், வழி ஆகியவற்றை மாற்றி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இது தான் ஹேக்கர்களின் முதல் விமான கடத்தல் ஆகும்.
பணம்
மலேசிய விமானம் போயிங் 777 ரக விமானம் ஆகும். அதை அப்படியே விற்றாலும் சரி, பாகம் பாகமாக விற்றாலும் சரி நல்ல பணம் கிடைக்கும். அதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு யாராவது விமானத்தை கடத்தியிருக்கலாம்.
கோளாறு
விமானத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் சிப்பந்திகளால் தகவல் கொடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் விமானம் மாயமான பிறகு பல மணி நேரம் பறந்துள்ளதால் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அழுத்தம்
விமானத்தில் காற்றழுத்தம் அதிகமாகியோ அல்லது குறைந்திருந்தாலோ விபத்து ஏற்பட்டிருக்கலாம். விமானத்தில் இருந்தவர்கள் ஆக்சிஜன் குறைவால் மூச்சு திணறியிருக்கலாம். ஏன் சிலர் இறந்திருக்கலாம்.
சிஸ்டம்கள்
விமானத்தில் சிஸ்டம்கள் செயல் இழக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. மலேசிய விமானத்தில் உள்ள எலக்ட்ரிக் சிஸ்டம்கள், தகவல் தொடர்பு சிஸ்டம்கள், ஹைட்ராலிக் கன்ட்ரோல்கள் செயல் இழந்திருக்கலாம்.
தவறு
விமானிகள் செய்யும் தவறுகளாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும். கடந்த 2007ம் ஆண்டு புத்தாண்டு அன்று ஆடம் ஏர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்தோனேசிய கடலுக்குள் பாய்ந்தது. அதன் பாகங்கள் ஒரு வாரம் கழித்து தான் கிடைத்தது. ஆனால் பெரும்பாலான பாகங்கள் கடலுக்கு அடியில் தங்கிவிட்டது.
மெக்கானிக்கல்
மெக்கானிக்கல் கோளாறுகளால் விமானம் விபத்துக்குள்ளாகக்கூடும். ஏற்கனவே விபத்துக்குள்ளாகி ரிப்பேர் செய்யப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 மீண்டும் விபத்துக்குள்ளானது தான் மோசமான விமான விபத்து ஆகும்.
தீ விபத்து
விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டு அது விபத்துக்குள்ளாகி இருக்கலாம். மலேசிய விமானம் மாயமான அன்று விமானம் ஒன்று எரிந்து தரை நோக்கி வந்ததை பார்த்ததாக எண்ணை அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதறல்
விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருக்கையில் சிதறி இருக்கலாம். அது குண்டு வெடித்ததாலோ அல்லது மெக்கானிக்கல் விபத்தாலோ வெடித்திருக்கலாம்.
விபத்து
விமானத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் பறக்க முடியாமல் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். விமானம் கடைசியாக ரேடாரில் சிக்கிய இடத்தில் கூட அது விபத்துக்குள்ளாகி விழுந்திருக்கலாம்.
தண்ணீர்
விமானத்தை விமானி ஏதோ அவசரத்தில் நீரில் தரையிறங்க முயற்சித்து தோல்வி அடைந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் உடைந்த பாகங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை.
தற்கொலை
விமானி தற்கொலை செய்து கொள்ள விமானத்தை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம். இது போன்ற சம்பங்கள் ஏற்கனவே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் பாகம்
விமானத்தின் மேற்கூரை பறந்திருக்கலாம். 1988ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ஹவாய் தீவில் உள்ள ஹிலோவில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஹோனலூலுவுக்கு சென்ற போயிங் விமானத்தின் மேறக்கூரையின் ஒரு பகுதி நடுவானில் பறந்தது. அந்த கூரை பறந்த இடத்தில் சிப்பந்தி பெண் ஒருவர் தனது உடலை வைத்து மறைத்தார். 15 நிமிடங்கள் கழித்து விமானம் பத்திரமாக தரையிறங்கிய போதிலும் அந்த பெண் விமான ஓட்டை வழியாக பறந்துவிட்டார். அவரின் உடல் கிடைக்கவே இல்லை.
வெடிகுண்டு
விமானத்தை யாராவது குண்டு வைத்து தகர்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால் இந்நேரம் அந்த சம்பவத்தை செயற்கைக்கோள் கண்டுபிடித்திருக்கும் அல்லது உடைந்த பாகங்களாவது கிடைத்திருக்கும்.
ராணுவ ஏவுகணை
முன்னதாக 1983ம் ஆண்டு ஈரான் ஏர் விமானம் 655 மற்றும் 1988ம் ஆண்டு கொரியன் ஏர் விமானம் 007 ஆகியவை ராணுவ தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் மலேசிய விமானத்திற்கு அப்படி நடந்ததாக தெரியவில்லை.