ஜெர்மனி விமான விபத்து: கடைசி 8 நிமிடங்களில் பல ஆயிரம் அடி உயரத்தை இழந்த விமானம்!
பாரிஸ்: 150 பயணிகளுடன் நேற்று விபத்துக்குள்ளான லுப்தான்ஸாவின் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அதன் வேகத்தை பல மடங்கு இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகர் நோக்கி சென்ற அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணித்த 150 பேரும் பலியாகிவிட்டனர். ஆல்ப்ஸ் மலைத் தொடரில் கொட்டும் பனி காரணமாக விமானம் விழுந்த இடத்தில் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை. மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் இருந்து தரையிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
விபத்துக்குள்ளாகும் முன் விமான பைலட்டுகள் அபாய நிலை தொடர்பாக எந்த சிக்னலையும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பவில்லை.
ஆனால், கடைசி 8 நிமிடங்களில் விமானம் தனது உயரத்தையும் மிக வேகமாக இழந்து மலைப் பகுதியில் மோதி வெடித்துச் சிதறியுள்ளது. விமானத்தின் பறக்கும் உயரம் மிகவும் குறைந்ததால் ரேடார் தொடர்பை விமானம் இழந்து, அபாய சிக்னலை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
விமானத்தில் இருந்த 15 பள்ளி மாணவர்கள், 2 சிறு குழந்தைகள், 3 விமானிகள், 3 விமான சிப்பந்திகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகிவிட்டனர்.
ஜெர்மனியின் லுப்தான்ஸா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தின் இந்த ஏர்பஸ் A320 ரக விமானம் மலைப் பகுதியில் மோதி வெடித்து பல பாகங்களாக சிதறிக் கிடக்கிறது.
விமானம் விபத்துக்குள்ளானபோது அது 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதியின் மலைத் தொடர்களின் உயரம் 2,000 முதல் 9,000 அடி வரை என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சிதைந்த பாகங்களில் ஒன்று கூட பெரிய அளவில் இல்லை. எல்லாமே தூள் தூளாகி சிதறிக் கிடக்கிறது. இதனால் விமானம் மிக பயங்கரமான வேகத்தில் மலைப் பகுதியில் மோதி வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிகிறது.
பார்சிலோனாவில் காலை 10 மணிக்குக் கிளம்பிய விமானம் 10.53க்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளம்பிய சற்று நேரத்தில் 38,000 அடி உயரத்தை எட்டிய விமானம் அடுத்த சில நமிடங்களில் தொடர்ந்து தனது வேகத்தையும் உயரத்தையும் இழந்தவாரே பறந்துள்ளது. கடைசி 8 நிமிடங்களில் அந்த விமானத்தின் உயரம் 6,000 அடியாகக் குறைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி பாரிஸ் நகரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் விவரங்களை வைத்தே விபத்துக்கான காரணம் தெரியவரும்.
இந்த விமானம் 24 ஆண்டுகள் சேவையில் இருந்து வந்துள்ளது. விமானம் மிக நல்ல நிலையிலேயே இருந்ததாக லுப்தான்ஸா தெரிவித்துள்ளது.