ஜெயில், அவமானம், விரட்டியடிப்பு.. காயங்களை புறந்தள்ளி நாட்டையே பிடித்த கதை! யார் இந்த ஜி ஜின்பிங்
பெய்ஜிங்: சீனாவில் மிகப் பெரிய தலைவராக இருக்கும் அதிபர் ஜி ஜின்பிங்கின் கடந்த கால வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது.
சீனாவில் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டின் 20ஆவது கூட்டம் இதுவாகும்.
சமீப காலங்களில் எந்த சீன தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை. ஆனால் அதை மாற்றி ஜி ஜின்பிங் இந்த முறை மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம்.. இந்தியா புறக்கணிப்பு! சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு
ஜி ஜின்பிங்
சீனாவில் கட்சியைத் தாண்டி யாரும் வளரக் கூடாது. அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதால் 1990களில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதை ஜி ஜின்பிங் 2018இல் சத்தமின்றி நீக்கிவிட்டார். கட்சிக்கு உள்ளேயும் எதிர்ப்பவர்களை அவர் ஒரம்கட்டிவிட்டதால் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் இருக்க முடியும். இது எதோ இப்போது நடந்தது இல்லை. 2012 முதலே இதற்கான நடவடிக்கையை ஜி ஜின்பிங் தொடர்ந்து எடுத்தே வந்து இருக்கிறார்.
செல்வாக்கு
அவரது செல்வாக்கு எந்தளவுக்கு இருந்தது என்றால், 2017இல் சீனாவின் புதிய சகாப்தத்திற்கான அவரது தத்துவத்தை அந்நாட்டின் அரசியலமைப்பிலேயே சேர்க்கக் கட்சியினர் வாக்களித்தனர். மாவோ மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டெங் சியோபிங் கருத்துகள் மட்டுமே அரசியலமைப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவர் உள்நாட்டில் சர்வாதிகாரியாகவே மாறிவிட்டார் என்கிறார்கள். பெரு நிறுவனங்கள் தொடங்கி அனைவரும் அவர் பார்த்தாலே அஞ்சுகின்றனர். சீனாவில் மாவோவிற்குப் பிறகு மிகவும் சர்வாதிகாரியான தலைவர் என்றும் ஜி ஜின்பிங்கை சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜெயில், அவமானம்
உய்குர் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டது, ஹாங்காங் மற்றும் தைவான் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்குச் சாட்சி. இப்படி சில ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்தமாகக் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஜி ஜின்பிங் யார் என்று தெரியுமா. வாங்க பார்க்கலாம்.. 1953இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான ஸீ ஸாங்க் ஷ்வானுக்கு மகனாகப் பிறந்தவர் தான் ஜி ஜின்பிங். கம்யூனிஸ்ட் கட்சியின் இளவரசராகவே அப்போது இவர் பார்க்கப்பட்டார். இருப்பினும், இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே மாவோ இவரது தந்தையை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பினார். இதனால் அவரது குடும்பம் பல்வேறு அவமான்களை எதிர்கொண்டது.
விரட்டி அடிப்பு
அரசு உயர் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு, 15 வயதில், மறு கல்விக்காகக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் உழைப்புடன் சேர்ந்து கல்வி கற்றார். அப்போது அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் பல முறை சேர முயன்றார். இருப்பினும், அவரது தந்தை கைது செய்யப்பட்டதால் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. இறுதியாக 1974இல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டார். சாதாரண தொண்டராகக் கட்சியில் இணைந்த அவர் மெல்ல டாப் இடங்களுக்கு உயர்ந்தார்.
ஆக்ரோஷம்
1989இல் தனது 35 வயதில் அவர் தெற்கு புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டே நகரில் கட்சித் தலைவராக இருந்தார். அப்போது , பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் சிலர் அரசியல் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தினர். ஜி ஜிங்பிங்கிற்கும் போராட்டம் நடக்கும் இடத்திற்கும் தொடர்பு இல்லையென்றாலும் கூட அவர் மற்ற தலைவர்களுடன் இணைந்து ஆக்ரோஷமான முறையில் போராட்டத்தை ஒடுக்கினார்.
ஒலிம்பிக்
சீனாவில் நடந்த மிகப் பெரிய வன்முறைகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தது சில நூறு பேராவது கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வன்முறையால் தான் 2000இல் ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பையே சீனா இழந்தது. இதன் காரணமாகவே 2008 ஜி ஜின்பிங் அதிபராக இருந்த போது, மிகப் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் போட்டிகளை அவர் நடத்திக் காட்டினார்.
குடும்பம்
ஜி ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அந்நாட்டின் பிரபல பாடகியாவர். இவர்கள் பல நேரங்களில் ஜோடியாக அந்நாட்டு ஊடகங்களில் தோன்றுவார்கள். முந்தைய அதிபர்களின் மனைவிகள் பொது நிகழ்வைத் தவிர்த்து வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இவர்கள் இருந்தனர். தம்பதியருக்கு ஜி மின்ஜி என்ற மகள் உள்ளார், அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் பொதுவெளியில் இல்லை.
சீர்திருத்தங்கள்
அவரது ஆட்சியில் சீனா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நஷ்டம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடியது, மாசு கட்டுப்படுத்தும் நடவடிக்கை எனப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. குறிப்பாகக் கட்டுமான துறை! பல ஆண்டுகளாக வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த கட்டுமான துறை தேக்க நிலையில் உள்ளது. இதை எல்லாம் கலைந்தால் மட்டுமே ஆட்சியில் மட்டுமின்றி மக்கள் மனங்களிலும் நிலைக்க முடியும்.