ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தது ஏன்? முக்கியமான 3 காரணங்கள்
Recommended Video
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும், வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்த இவ்விரு அணு ஆயுத பலம்மிக்க நாட்டு தலைவர்களும், சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது உலக நாடுகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் ஏன் சிங்கப்பூரை சந்திப்புக்கான இடமாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற கேள்வி எழலாம்.
பாதுகாப்பு
இந்த சந்திப்பு ஏற்பாட்டால் சிங்கப்பூர் அரசுக்கு ரூ.101 கோடி செலவாகும் என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏன், இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நிகழ்கிறது என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் காரணம், சிங்கப்பூர்தான் இருநாட்டு தலைவர்களுக்கும் பாதுகாப்பான நாடாகும். உலகிலேயே மிக பாதுகாப்பான நாடுகளில் 6வது இடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும் உள்ளது சிங்கப்பூர். அந்த நாட்டு காவல்துறை, உளவுத்துறை மிகவும் வலிமையானது.
அனுபவம் உள்ள நாடு
ஏற்கனவே பல பெரிய உச்சிமாநாடுகளை நடத்திய அனுபவம் சிங்கப்பூருக்கு உள்ளது. வருடாந்திர ஷாங்க்ரி-லா டயலாக் சந்திப்பை நடத்துகிறது சிங்கப்பூர். பில்லியனியர்கள், மற்றும் உலக தலைவர்கள் அதில் பங்கேற்கிறார்கள்.
வரலாற்று முக்கியம்
2015ல் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும், தாய்வானின் அப்போதைய அதிபர் மா யிங்-ஜியோ ஆகியோர் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. 65 வருடங்களில் அவ்விரு நாட்டு தலைவர்கள் சந்தித்தது அதுதான் முதல் முறை.
பொதுவான நாடு
சிங்கப்பூர் மற்றும் வட கொரியா நடுவே 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக நல்ல நட்பு நிலவி வருகிறது. ஐநா சபை விதித்த தடை காரணமாக சற்று விரிசல் ஏற்பட்டிருந்தாலும், விசா இன்றியே சிங்கப்பூர் செல்லும் அளவுக்கு வட கொரியாவுக்கு இதற்கு முன்பாக சலுகை காட்டிவந்தது சிங்கப்பூர். வட கொரிய செல்வந்தர்கள், சிங்கப்பூரை ஷாப்பிங், பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது வாடிக்கை. அதேநேரம், அமெரிக்காவுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கூட்டாளியாகவும் சிங்கப்பூர் உள்ளது.