34 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா- ஈரான் உறவில் புதிய திருப்பம்?
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையேயான 34 ஆண்டுகால விரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய வகையில் இருநாட்டு அதிபர்களும் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேச உள்ளனர்.
ஈரான் ரகசிய அணு உலை மூலம் ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மின்சார உற்பத்தி திட்டத்திற்கு மட்டுமே அணு உலைகளை பயன்படுத்துகிறோம் என்பது ஈரானின் பதில்.
இதை ஏற்க அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மறுக்கின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈரான் நாட்டின் புதிய அதிபராக ஹசன் ரப்பானி பதவி ஏற்ற பிறகு அந்நாட்டின் நிலைப்பாட்டில் சற்று மாற்றம் உருவாகி வருகிறது. அண்மையில் ரப்பானி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது, எனது ஆட்சி காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஐ.நா.வின் 68-வது பொதுசபை கூட்டம் அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி செல்கிறார். அப்போது அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஷா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டது. இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசியதில்லை. தற்போது கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சந்திக்க இருக்கின்றனர்.
இதனால் இருநாடுகளிடையேயான நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.