பல்லியைப் பெற்றெடுத்தாரா இந்தோனேசிய பெண்... ?
இந்தோனேசியாவிலுள்ள ஒயினுண்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் டெபி நுபாடோனிஸ் (31) என்ற பெண். எட்டு மாத கர்ப்பமாக இருந்த டெபிக்கு கடந்த மே மாதம் பிரசவ வலி உண்டானது. சுத்தமாக மருத்துவ வசதிகளே இல்லாத அக்கிராமத்தில் டெபிக்கு உள்ளூர் மருத்துவச்சி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
முடிவில் டெபிக்கு பல்லி ஒன்று பிறந்ததாக மருத்துவச்சி தெரிவித்துள்ளார். இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மாந்திரீகம் செய்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பெண் ஒருவருக்கு பல்லி குழந்தையாக பிறந்த விசயம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்தது. இணையத்தில் வெளியான இத்தகவலால் பரபரப்பு உண்டானது. ஆனால், இத்தகவலை ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.
டெபியின் கிராமத்திற்கு அருகிலுள்ள குபாங் நகரைச் சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் மெஸ்சி இது தொடர்பாக கூறுகையில், ‘பெண் ஒருவருக்கு பல்லி குழந்தையாக பிறக்க வாய்ப்பேயில்லை. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுக்க சாத்தியமேயில்லை. இதுவரை அப்படி நடந்ததாக மருத்துவ வரலாற்றிலும் தகவல்கள் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அக்கிராம மக்களிடம் விசாரித்த போது டெபிக்கு கர்ப்பிணிக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்ததாகவும், பிரசவ வலி ஏற்பட்டதும் உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், டெபிக்கு பொய் கர்ப்பம் உண்டாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார் மெஸ்சி. அவ்வாறு பொய் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், நிஜ கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் அனைத்து அசௌகரியங்களையும் உணர்வார்கள்.
மாதங்கள் செல்லச் செல்ல கர்ப்பப்பையும் விரிவடைந்து வயிறு பெரிதாகும். நிஜ பிரசவ வலி போன்றே வலி வரலாம். அப்போது பிரசவத்தின் போது ஏற்படுவது போன்ற ரத்தப்போக்கும் உண்டாகலாம்.
அது போன்ற டெபி பிரசவ வலியை உணர்ந்த சமயத்தில் எதேச்சையாக பல்லி அங்கு வந்திருக்க வேண்டும், அதனை டெபிக்கு பிறந்ததாக மருத்துவச்சி தவறுதலாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்' எனக் கூறுகிறார் மெஸ்சி.