கடலில் விழுந்து தத்தளித்த சீன பெண்... 38 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு!
பெய்ஜிங்: சீனாவில் கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த பெண் ஒருவர் 38 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவை சேர்ந்த பான் (32) என்ற பெண் ஷாங்காய் நகருக்கு செல்வதற்காக ஜப்பானில் உள்ள பியூகுயோகாலில் இருந்து சொகுசு பயணிகள் கப்பலில் புறப்பட்டு சென்றார். கடந்த ஆக.10-ந் தேதி இரவு 9 மணியளவில் ஷாங்காய் பகுதியில் கப்பல் சென்றபோது, கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பான் கடலுக்குள் தவறி விழுந்துவிட்டார். பான் கடலுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. இதையடுத்து, பான் உதவி கோரி கூச்சலிட்டுள்ளார்.
இதனிடையே உதவிக்காக யாரும் வருவார்கள் என கடலுக்குள் விழுந்த பான் பல மணி நேரமாக தண்ணீரில் மிதந்தபடியே இருந்தார். இந்நிலையில் 38 மணி நேரம் கழித்து, அதாவது ஆக.12-ந் தேதி ஒரு மீன் பிடி படகு அங்கு வந்துள்ளது. அதில் பயணம் செய்தவர்கள் கடலில் மிதந்த அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலில் ஜெல்லி மீன்கள் கொட்டியதால் சிறிய காயங்களும், வெயில் காரணமாக கொப்பளங்களும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.