பயங்கரமான வேலையில்லாத் திண்டாட்டம் வரும்.. பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. உலக வங்கி 'வார்னிங்'!
சிட்னி: மிகப் பெரிய அளவில் உலகம் தழுவிய வேலையில்லாத் திண்டாட்டம் வரப் போவதாகவும், இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் உலக வங்கி ஒரு பரபரப்புப்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இப்போதைக்கு தீர்வு ஏதும் இல்லை என்பதால் இது கவலை தரும் விஷயமாக மாறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஜி 20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இந்தத் தகவலை உலக வங்கி வெளியிட்டது.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வெடித்துப் பெருகும் மக்கள் தொகை
உலக மக்கள் தொகை பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. இதை சமாளிக்க, 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் 60 கோடி புதிய வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கியாக வேண்டும்.
வேலை இல்லை.. தரமும் இல்லை
தற்போது உலக அளவில் போதுமான வேலைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அப்படியே வேலை இருந்தாலும் அதில் தரம் இல்லாத நிலை காணப்படுகிறது.
ஊதிய வித்தியாசம் பெருகுகிறது
அதேபோல சமச்சீரில்லாத ஊதியப் பிரச்சினை ஜி 20 நாடுகளில் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆண், பெண் ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளும் குறைந்தபாடில்லை.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா பரவாயில்லை
ஜி 20 நாடுகளில் பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் சற்று நிலைமை பரவாயில்லை என்ற போதிலும் ஒட்டுமொத்த ஜி 20 நாடுகளின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
சந்தைப் பொருளாதாராம் தேறுகிறது
ஜி 20 நாடுகளில் உள்ள வளர்ந்த நாடுகளில் சந்தைப் பொருளாதாரம் சற்று மேம்பட்டுக் காணப்படுகிறது. இங்கு தேவையான அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சீனா, பிரேசில் இவற்றில் சில. ஆனால் "அவுட்புட்" கவலைக்கிடமாக உள்ளது.
காத்திருக்கும் சவால்கள்
தற்போதைய நிலைமை சற்று அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
10 கோடிப் பேருக்கு வேலை இல்லை .
ஜி 20 நாடுகளில் இன்றைய தேதியில் 10 கோடிப் பேர் உரிய வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனராம்.
44.7 கோடி பேர் மோசம்
வேலை கிடைத்தவர்களில் 44.7 கோடிப் பேர் சரிவர வேலை பார்க்காத காரணத்தால் கிடைத்த வேலையை இழக்கும் நிலையில் உள்ளனராம்.
பொருளாதார வளர்ச்சியில் தேக்கம்
2013-14 ஆண்டில் ஜி 20 நாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார மீட்பானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம். இது எதிர்காலத்திலும் கூட இறங்குமுகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமாளிப்பது கடினம்
தற்போதைய நிலையில் எதிர் வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார சீர்குலைவை சமாளிக்க எந்தவிதமான தீர்வும் கண்ணுக்குத் தென்படவில்லை. எனவே வரும் காலம் கஷ்ட காலமாக இருக்கும் என்பது உறுதி.
ரொம்பப் பயமுறுத்துதே உலக வங்கி...!