செல்ஃபி எடுத்தா வேலைக்கு ஆப்பு!
நியூயார்க்: நின்னா செல்ஃபி....நடந்தா செல்ஃபி... ஏன் சிலர் சாகும்போது கூட செல்ஃபி எடுத்துக்கொண்டே செத்துப்போகிறார்கள். சிலர் சாகப்போகிறோம் என்று தெரியாமலேயே செல்ப்ஃபி எடுக்கப் போய் தவறி விழுகிறார்கள்.
இந்த செல்ஃபி கலாச்சாரம் இப்போது தீவிரமாக பரவிவருகிறது. ஒருவரோடு ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் செல்போன் என்ற நிலைமாறி இன்றைக்கு செல்ஃபி எடுக்கவே செல்போன் என்றாகிவிட்டது.
அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் இன்றைக்கு அதிகம் செல்ஃபி எடுக்கின்றனர். இதனால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி தெரியாமலேயே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.
சும்மா இருந்தாலும் ஸ்மார்ட் போன் கையில் வைத்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதும் இதனால்தான். சரி நம்முடைய கட்டுரைக்கு வருவோம்.
செல்ஃபி எடுத்தா உங்களை வேலையை விட்டு எடுத்துருவாங்க என்கிறது இந்த ஆய்வு. அப்படியே எடுத்தாலும் ஃபேஸ்புக்ல மட்டும் போட்டுடாதீங்க. ஃபேஸ்புக்ல லைக் போட்டாலும் வேலை அன்லைக் ஆயிருமாம். இதை நான் சொல்லவில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.
அமெரிக்கா ஆய்வு
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதன்படி, ஒன்று தன்மீதும் தன் உடல் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
வேலைக்கான ஆட்கள் தேர்வு
இந்த செல்ஃபி எதற்காக பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக ஹெச்ஆர்கள் கூறி உள்ளனர்.
ஆளுமை மீது நம்பிக்கை
இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார் என்கிறார் தொழில்முனைவோரான க்ராவ்ஃபோர்ட். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத - வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுயகட்டுப்பாடு
செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்" என்பது க்ராவ்ஃபோர்ட் கருத்தாகும்.
சந்தேகப் பார்வை
மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு. உங்களின் ஆளுமை மீதும் சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.