விஷவாயு.. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் பலி.. ஸ்ரீபெரும்புதூரில் சோகம்.. இருவர் கைது
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டல் மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ளது
சத்தியம் கிராண்ட் எனும் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் 51, நவீன்குமார் 30, திருமலை 18 ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 30அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாக போராடியும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை.
வெடித்த செப்டிக் டேங்க்.. விஷவாயு கசிவு..அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்.. பதற்றத்தில் ஓசூர்
கழிவுநீர் தொட்டி
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15அடி அளவிற்கு கழிவு நீரை முதல்கட்டமாக இறைத்தனர். அப்போது மூவரும் கழிவு நீரின் சகதியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
உடல்கள் மீட்பு
இதன் பின் மூவரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக நவீன்குமார் ,மற்றும் திருமலை ஆகிய இருவரது உடலை மட்டும் மீட்க முடிந்தது. ரங்கநாதன் என்பரது உடலையையும் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
2 பேர் கைது
மீட்கப்பட்ட மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோகத்தில் கிராம மக்கள்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றப்போது விஷ வாய்வு தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் கட்சிப்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவு நீரை அகற்ற எத்தனையோ இயந்திரங்கள் வந்தாலும் மனிதர்கள் எந்த வித பாதுகாப்பும் இன்றி இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சோகம் அடிக்கடி நேரிடுகிறது. இது போல மனித உயிர்கள் இனியும் விஷ வாயுவிற்கு பலியாகாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது வேண்டுகோளாகும்.