தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள்! பிறகு மாலையா சூடுவார்கள்! TR பாலு ஓபன் டாக்!
காஞ்சிபுரம்: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள் என்றும் பிறகு மாலையா உங்களுக்கு சூடுவார்கள் எனவும் திமுக நிர்வாகிகள் மத்தியில் கிண்டலாக பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.
சீட் கிடைக்காதவர்கள் கல்லால் அடிக்காத வரை சந்தோஷம் என நினைத்துக் கொள்ளுமாறு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாடம் எடுத்திருக்கிறார் அவர்.
மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை; 3 படகுகள் சிறைபிடிப்பு
தாமெல்லாம் அடிபட்டு, உதைபட்டு இந்த உயரத்தை அடைந்திருப்பதாக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே முழுமையாக உள்ளதால் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., மானம், மரியாதையை இழந்தால் தான் நிர்வாகியாக இருக்க முடியும் என்றும் அரசியலில் வசவுகளும் வரும், புகழ்ச்சிகளும் வரும் எனவும் பேசினார்.
திட்டு கிடைக்கும்
மேலும், தன்னை சந்திக்கும் நிர்வாகிகள், அண்ணே சீட் கொடுக்கவில்லை என தொண்டர்கள் எங்களை திட்டுவதாக முறையிடுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், சீட் கிடைக்காதவர்கள் திட்டாமல் பிறகு கழுத்தில் மாலையா சூடுவார்கள் என வினவினார். நிர்வாகியாக இருப்பது கடினமான பணி என்றும் மானம், மரியாதை என எல்லாவற்றையும் இழந்தால் தான் அதில் நீடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். தாம் மாவட்டச் செயலாளராக இருந்தபோது பலமுறை கட்சியினரிடம் திட்டு வாங்கியிருப்பதாக நினைவுகூர்ந்தார்.
அரசியல் எளிதல்ல
அரசியல் கட்சிகளில் நிர்வாகியாக இருக்கலாம் என நினைப்பது அவ்வளவு எளிதான வேலையல்ல என்பதை ஞபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அடிபட்டு, உதைபட்டு, இன்று இந்த இடத்திற்கு தாம் வந்துள்ளதாக பழைய நினைவுகளில் மூழ்கினார் டி,ஆர்.பாலு எம்.பி. அவரது இந்தப் பேச்சை கேட்ட சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர்கள் வரவேற்பு தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல இடங்களில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் அண்ணா அறிவாலயத்துக்கு மாவட்டச் செயலாளர்கள், நகரச்செயலாளர்கள் மீது புகார் ஓலைகள் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தருணத்தில் இது போன்ற சலசலப்புகள் ஏற்படுவதும் பிறகு அமைதியாவதும் வழக்கமான ஒன்றாகும்.