கருகும் ‘காக்கி டவுசர்’.. நாள் குறித்த காங்கிரஸ்! பாஜக-RSS மீது அட்டாக்.. டி சர்ட் பதிவுக்கு பதிலடி
கன்னியாகுமரி: ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டீ சர்ட் விலையை பதிவிட்டு பாஜக விமர்சித்த நிலையில், காக்கி டவுசர் கருகுவதை போன்ற படத்தை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று முந்தினம் கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 6 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி
பயண விபரம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.
150 நாட்கள்
380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.
டி சர்ட் சர்ச்சை
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என புகைப்படத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் ட்வீட்
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்துவிட்ட நிலையில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முன்பு அணிவகுப்புக்கு பயன்படுத்தி வந்த காக்கி டவுசர் தீயில் கருகும் வகையில் ஒருபடம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் 145 நாட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "வெறுப்பிலிருந்து நாட்டை விடுவித்து பாஜக - ஆர்எஸ்எஸால் ஏற்பட்ட பாதிப்புகள் களையப்படும். படிப்படியாக எங்கள் இலக்கை அடைவோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.