பீதி கிளப்பும் பிஎஃப் 7.. நாளை முதல் ரேண்டம் சோதனை! 4 விமான நிலையங்களில் கட்டாயம் - அமைச்சர் மா.சு!
கன்னியாகுமரி : அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் நாளை முதல் ரேண்டம் முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.
சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆன்லைனில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மா. சுப்பிரமணியன்
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் நாளை முதல் ரேண்டம் முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்" பி.எப்7 கொரானா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருவதை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

ரேண்டம் சோதனை
இதனால் அந்த நாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் நாளை முதல் ரேண்டம் முறையில் சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டு வரும் வேலையில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக இறப்பு என்பது இல்லை, தமிழக முதல்வரின் நடவடிக்கை காரணமாக 96% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதால் இறப்பு இல்லை. தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன.

மருத்துவர் நியமனம்
ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு டாக்டர் உட்பட நியமிக்கப்பட உள்ளனர். மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்ததும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிவதற்குரிய கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன விரைவில் இந்த பிரிவு செயல்பட துவங்கும். உக்ரைனில் உள்ள பிரச்சினை காரணமாக தமிழக மருத்துவ மாணவிகள்பாதிக்கப்பட்ட நிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்து கூறப்பட்டது அதே மருத்துவ பாடத்திட்டம் உள்ள வேறு நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த மாணவ மாணவிகளை சேர்க்க ஆலோசனை மேற்கொற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications