கைதியால் மதம் மாறியவருக்கு உயரிய பட்டம்.. “இந்தியாவின் முதல் இல்லற புனிதர்”- யார் இந்த தேவசகாயம்?
கன்னியாகுமரி: 18ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த தேவசகாயம் என்பவருக்கு வரும் மே 15-ஆம் தேதி வாட்டிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
கிறிஸ்தவத்தில் ஈடுபட்டு, மக்களால் பெரிதும் போற்றப்படும் நபர்களுக்கு உலக கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாட்டிகன், புனிதர் பட்டம் வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
இந்தியாவிற்கு வந்து பிணியுற்ற மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, கேரளாவில் கன்னியாஸ்திரியாக இருந்த அல்போன்சம்மாள் ஆகியோருக்கு ஏற்கனவே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த தேவசகாயம்?
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712-ல் பிறந்த தேவசகயாத்தின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம், வடமொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
போர் பயிற்சியும் பெற்ற நீலகண்டன், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மாவின் படையில் பணியாற்றினார். நீலகண்டனுக்கு திருமணம் முடிந்த பிறகு அவரை தனது அரசவை அலுவலராக நியமித்தார் அரசர் மார்த்தாண்ட வர்மா.

மதம் மாறக் காரணம்
டச்சு படைத்தளபதியாக இருந்த டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் போரில் சிறைபிடித்தார். கத்தோலிக்கரான டிலனாய், கைதியாக இருந்தாலும் மன்னரின் அன்பைப் பெற்றதால் அவரது படைதளபதியாக நியமிக்கபட்டார்.
இதனால், டிலனாயுடன் நீலகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நீலகண்டனுக்கு டிலனாய் இயேசுவின் போதனைகளைக் கூறினார். இதனை கேட்டுக் கேட்டு மனமாற்றமடைந்த நீலகண்டன் கிறிஸ்தவத்திற்கு மாற முடிவு செய்தார்.

தேவசகாயமான நீலகண்டன்
1745ஆம் ஆண்டு வடக்கன் குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் நீலகண்டன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார். அதன்பிறகு 'லாசரஸ்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தமிழில் தேவசகாயம் என அழைக்கப்பட்டார். அவரது மனைவியும் தனது பெயரை ஞானப்பூ என மாற்றிக்கொண்டார்.
பின்னர், தேவசகாயமும், அவரது மனைவி ஞானப்பூவும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதியக் கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்து வந்தனர்.

கடுமையான தண்டனை
தேவசகாயம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியதால் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் கோபத்தை எதிர்கொண்டார். அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
மேலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பின்னர் அவர் ஊர் ஊராக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். 1752-ல், தேவசகாயம் ஆரல்வாய்மொழி காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பாறையில் இருந்து உருட்டி விடப்பட்டது.

கத்தோலிக்க கிறிஸ்தவ தியாகி
கொடூரமாக கொல்லப்பட்ட தேவசகாயம், தென்னிந்தியாவில் கத்தோலிக்க சமூகத்தினரால் ஒரு தியாகியாகக் கருதப்பட்டார். தேவசகாயத்தின் உடலில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் அடக்கம் செய்தனர். இதையடுத்து தேவசகாயத்தின் கதை கத்தோலிக்கர்கள் மத்தியில் பரவியது.

புனிதர் பட்டம்
2004-ம் ஆண்டில், கன்னியாகுமரியில் உள்ள கோட்டார் மறைமாவட்டம், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷப்களின் மாநாடு ஆகியவையும் இணைந்து தேவசகாயத்தை வாட்டிகனுக்கு முக்தியடைந்தவராகப் பரிந்துரைத்தன. அவர் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாட்டிகன் அறிவித்தது.
அதன்படி வரும் 15ஆம் தேதி வாட்டிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் விழாவில் தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார். இந்தியாவில் இருந்து இதுவரை புனிதராக அறிவிக்கப்பட்ட யாருமே இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் இல்லை. தேவசகாயம், 'இந்தியாவின் முதல் இல்லற புனிதர்' என்ற பெருமையையும் பெறவுள்ளார்.












Click it and Unblock the Notifications