நாகர்கோவில் மாநகராட்சி: "கலைஞர்" வேண்டாம்.. "கலைவாணர்" இருக்கட்டும்.. எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்த நிலையில், பழைய பெயரே தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
கலைவாணர் பெயரில் இருந்த பழமையான கட்டடத்தை இடித்துவிட்டு மாநகராட்சி சார்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிதாக இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்துக்கு கலைஞர் மாளிகை என பெயர் சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடும் எதிர்ப்பு
ஆனால், அந்த கட்டடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு, கலைவாணர் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என நாஞ்சில்நாடு வெள்ளாளர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கலைவாணர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

கருணாநிதி சூட்டிய பெயர்
நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு 48 ஆண்டுகளுக்கு முன் 'கலைவாணர் கலையரங்கம்' என்று பெயர் சூட்டியது, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்ட கலைவாணர் கலையரங்கத்தை பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறோம். கலைவாணர் கலையரங்கின் பெயரை மாற்றினால், அது அவருக்கு செய்யும் அவமரியாதை. இதை, கருணாநிதியின் வழித்தோன்றலாக ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது எனக் கோரி முதல்வருக்கும் கடிதம் அனுப்பினர்.

கருணாநிதி பெயர் இல்லை
இந்நிலையில், கருணாநிதி பெயர் சூட்டப்படாது என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. இக்கட்டடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் அனுமதி பெற்ற பின்னரே
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 198-ன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும் பொருந்தக்கூடியது) முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துக்களுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

பெயர் மாற்றம்
எனவே, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் / பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications