ரோடு சரியில்லையே.. சுட்டிக்காட்டிய நாம் தமிழர் நிர்வாகியை விரட்டி விரட்டி அடித்த ஒப்பந்ததாரர்கள்!
கன்னியாகுமரி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைவர் பிராங்கிளின் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாகர்கோயில் அருகே சாலை செப்பனிடும் பணியில் தரம் இல்லை என குற்றஞ்சாட்டி அதிகாரிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை ஒப்பந்ததாரர்கள் ஓட ஓட விரட்டி செல்போனை உடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே இறச்சகுளம் பகுதியில் இருந்து துவரங்காடு பகுதி நோக்கி செல்லும் சாலை செப்பனிடும் பணி நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த பணியை திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும் அரசு ஒப்பந்ததாரருமான கேட்சன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சாலையை தரமற்ற முறையில் செப்பனிடுவதாக குற்றம் சாட்டியும் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியதன் படி பழைய சாலையை அகற்றாமல் தரமற்ற முறையில் செப்பனிடப்படுவதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர், சாலை செப்பனிடம் பணி மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாய் தகராறில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த சம்பந்தப்பட்ட சாலை பணியின் ஒப்பந்ததாரரும் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளருமான கேட்சன், தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பிராங்கிளின் ஆகியோர் தலைமையிலான கும்பல் நாம் தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டி அடித்தனர்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நாம் தமிழர் கட்சியினரை கும்பலாக அடித்து துரத்திய காட்சி அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை தடிக்காரன் கோணம் ஊராட்சித் தலைவர் பிராங்கிளின் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.