எங்களுக்கு இதான் வேலையா? - மின்வாரிய பொறியாளர் அலட்சியம்.. தீயாகப் பரவும் ஆடியோ!.. ஏற்கனவே சம்பவம்?
கன்னியாகுமரி : குமரி மாவட்டம் களியக்காவிளையில் மின் கம்பி அறுந்து கிடப்பதாக தகவல் கூறிய நபரிடம் மின்வாரிய அலுவலக பொறியாளர் அலட்சியமாக பதில் கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
தங்கள் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து ஆபத்தான முறையில் கிடப்பதாக போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்த நபரிடம் மின் வாரிய பணியாளர் ஒருமையில் பேசியுள்ளார்.
புகார் அளித்த நபரிடம் அலட்சியமாக பதில் அளிக்கும் மின் வாரிய பொறியாளர் தொடர்பான உரையாடல் ஆடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஒருசில இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் கம்பங்கள் சேதமடைந்தும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதியில் உள்ள சாலையின் நடுவே மின் கம்பி ஒன்று வாகனம் செல்லும்போது அறுபட்டு சாலையில் ஆபத்தான முறையில் விழுந்து கிடந்துள்ளது.

அலட்சிய பதில்
மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த நிலையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் விரைந்து அதைச் சீர்செய்யுமாறு ஒரு நபர் களியக்காவிளை மின்வாரிய அலுவலக பொறியாளரை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நபரிடம் அலுவலக பொறியாளர் அலட்சியமாக பதில் கூறும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

எங்களுக்கு இதான் வேலையா?
அந்த ஆடியோவில் பேசும் பொறியாளர், "உங்களுக்குதான் அடிக்கடி சர்வீஸ் வொயர் கட்டாகுது.. சும்மா எப்படி கட் ஆகும்? எங்களுக்கு இதான் வேலையா? உன் மேல போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன்." என ஒருமையிலும் பேசுகிறார். பதிலுக்கு எதிர் தரப்பில் பேசும் நபரும் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த ஆடியோ வேகமாகப் பரவி வருகிறது.

முன்பே ஒருமுறை
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தின் சேவை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மின்தடை தொடர்பாக கேள்வி கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications