சினிமாவில் 'ஜாலி பார்ட்டி'.. நிஜத்தில் 'சீரியஸ்'... ரசிக்க வைத்த விஜய் வசந்த் - பொன்னர் 'மீட்'
கன்னியாகுமரி: நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் வசந்த் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் சந்தித்து, கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்த நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி இடைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச். வசந்தகுமாரின் மகனும், திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.
பொன்னர்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்னர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அதைத் தொடர்ந்து, இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் மனுத் தாக்கல் செய்தபின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் ராஜன் மனு தாக்கல் செய்தார். அவருடன் விஜய் வசந்தும் உடன் சென்றிருந்தார். அப்போது அங்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் பொன். ராதாகிருஷ்ணனும் உடன் வந்திருந்தார்.
நலம் விசாரிப்பு
இதனால், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் விஜய் வசந்த் - பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதனைக் கண்டு, கூடியிருந்த தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜாலி பார்ட்டி
பொதுவாக, சினிமாவில் வெகுளி கேரக்டராக நடிப்பது விஜய் வசந்தின் வாடிக்கை. வெங்கட்பிரபு டீமின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான விஜய் வசந்த், ஜாலி பார்ட்டி என்றும் மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ளாத கேஷுவல் கேரக்டர் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சினிமாவிலும் இயல்பாக கேஷுவலாக இருக்கார், அரசியலிலும் எதிர்தரப்பை கூட மதிக்கும் பண்பு உள்ளதே என்று தொண்டர்கள் முணுமுணுப்பதை நம்மால் கேட்க முடிகிறது.
கைத்தட்டல்
முன்னதாக, பட்டுக்கோட்டையில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனும், திமுக வேட்பாளர் அண்ணாதுரையும் நேருக்கு நேர் சந்தித்து கைகளைப்பற்றி, பரஸ்பரம் நலம் விசாரித்தனர். உடல்நிலை குறித்தும், குடும்பம் குறித்தும் இரு எதிர்தரப்பு வேட்பாளர்களும் அக்கறையுடன் விசாரித்துக் கொண்டது வரவேற்பைப் பெற்றது. இரு வேட்பாளர்களும் அங்கு கைக்குலுக்கிய போது, தொண்டர்கள் ஆரவாரமாக கைத்தட்டல் எழுப்பினர்.
காணக்கிடைக்காத ஸீன்.. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்க...