மீண்டும் லாக்-அப் டெத்? கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்ம மரணம்.. குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக, உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் அஜித்தின் உடலை வாங்க மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
குலசேகரம் செல்போன் கடையில் திடீரென வெடித்த சார்ஜர்.. பலத்த சப்தத்தால் பரபரப்பு
அஜித்
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளையைச் சேர்ந்தவர் சசிகுமார். ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளியான சசிகுமாரின் மகன் அஜித் (22) ஐடிஐ முடித்து மினி லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கையெழுத்து போட சென்றவர்
இந்நிலையில் இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அஜித், குலசேகரம் காவல் நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை.
போலீஸ் மிரட்டல்
இந்நிலையில் குலசேகரம் காவல்நிலைய காவலர் சோனல் பிரதீப் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்கு சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று அதன் பிறகு அஜித் விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி அஜித்தின் தந்தை சசிகுமாரை அழைத்து சென்றுள்ளார்.
அஜித் உயிரிழப்பு
இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் உயிரிழப்பிற்கு குலசேகரம் போலீசாரே காரணம் எனக் கூறி அஜித்தின் தந்தை சசிகுமார், அஜித்தின் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதிர்ச்சி
சமீபகாலமாக குலசேகரம் காவல்நிலையத்தில் பொய்வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞர் ஒருவர் மர்மமாக முறையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மரணங்கள்
சமீபத்தில், சென்னையில் விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு பலியானார். அதேபோல, கொடுங்கையூரில் ராஜசேகர் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் பலியானார். இந்நிலையில், தற்போது கன்னியாகுமரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.