ராகுல் காந்தி நடைபயணம் - மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக புரட்சி - கே.எஸ் அழகிரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம், நாட்டில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக புரட்சிப் பயணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் நடைபயணத்தை, வரும் 7-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியவதாவது: மத்திய நிதி அமைச்சர், ஒரு மாநிலத்திற்கு சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. இதில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்சனை வேறு மாதிரி திரும்பியிருக்கும்.

பிரச்சனைகளை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்.
சுதந்திரத்திற்கு முன்பு, நாட்டில் தீண்டாமை, சமூக நீதி, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஜாதி வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது, அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்று, ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது, சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த நிலைமையை போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள்.

சமூக புரட்சிப் பயணம்
இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகத்தான், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக புரட்சிப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, 3,500 கிலோ மீட்டர் தூரம் அவர் பயணம் செய்ய உள்ளார். மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாகவோ, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலோ நோக்குவது கிடையாது. அவர்களே தனிப்பட்ட முறையில் இயங்கி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளால், நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்த பயணம்
தேசத்தின் இறையாண்மையை காக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நோக்கில் இந்த நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஜிஎஸ்டி-யில் குறைந்த நிதியை ஈடு செய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருப்புப் பணம்
கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கருப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை. வங்கியில் 15 ரூபாய் கூட போடப்படவில்லை. இவற்றையெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications