எந்த ஸ்டார் ஹோட்டலும் இல்லை.. கல்லூரியில் தங்கிய ராகுல் காந்தி.. செலவைக் குறைத்த காங்கிரஸ்.. ஏன்?
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நீண்ட நடைபயணத்தை நேற்று தொடங்கிய ராகுல் காந்தி, நேற்று இரவு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கினார்.
இன்று இரவு கோட்டாரில் தங்குகிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி இந்த நடை பயணத்தின்போது எந்த நட்சத்திர விடுதியிலும் தங்கப்போவதில்லை.
மிகவும் எளிமையான நடைபயணமாகவே இதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேரவனாக வடிவமைக்கப்பட்ட கண்டெய்னர்களிலேயே தங்குகின்றனர்.
திரண்ட 50000 தொண்டர்கள்.. ராகுல் காந்தியின் பாரத் ஜுடோ யாத்திரை.. 2 நாள் பயணம் தொடங்கியது!
ஒற்றுமை பயணம்
ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று மாலை கன்னியாகுமரியில் தொடங்கினார். ராகுல் காந்தியின் கையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியைக் கொடுத்து இந்தப் பயணத்தை தொடங்கி வைத்தார். கொடியைப் பெற்ற பின்பு அங்கிருந்து 600 மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. இந்நிகழ்வில் ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரியில் தங்கிய ராகுல்
இதையடுத்து நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும், அங்கேயே தங்கினர். செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று காலை 6.30 மணியளவில் இரண்டாவது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி. அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது நடைப்பயணத்தை ஆரம்பித்து, கொட்டாரம் காமராஜர் சிலை அருகில் தொடங்கி பொத்தையடி ஜங்ஷன் வரை நடந்துள்ளார்.
மாலை மீண்டும்
7 மணிக்கு மேல் பொத்தையடி முதல் வழுக்கம்பாறை வரையும், அதன்பிறகு வழுக்கம்பாறை சந்திப்பில் தொடங்கி சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளி வரையும் நடக்கிறார். பின்னர் மாலை 3 மணிக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியில் தொடங்கி கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வரையும், மாலை 4 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் துவங்கி டெரிக் சந்திப்பு வரையும் இந்த நடைபயணம் நடைபெற இருக்கிறது. பின்னர் கோட்டாரில் இன்று இரவு தங்குகிறார் ராகுல் காந்தி.
மூன்றாவது நாள்
செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும். மாலை 3 மணிக்கு புலியூர்குறிச்சி சர்ச் முதல் மேட்டுக்கடை மசூதி சந்திப்பு வரையும், மாலை 4 மணிக்கு தக்கலை மேட்டுக்கடை சந்திப்பு முதல் முளகுமூடு சந்திப்பு வரையும் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
4வது நாள்
செப்டம்பர் 10ஆம் தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு புனித மேரிஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல் சாமியார்மடம் வரையும், காலை 6.30 மணிக்கு சாமியார்மடம் முதல் சிராயன்குழி வரையும், காலை 7 மணிக்கு சிராயன்குழி முதல் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வரையும் நடைபயணம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல் குழித்துறை சந்திப்பு வரையிலும், மாலை 4 மணிக்கு குழித்துறை சந்திப்பு முதல் படந்தாலுமூடு சந்திப்பு வரையும், மாலை 4.30 மணிக்கு படந்தாலுமூடு சந்திப்பு முதல் தளச்சான்விளை வரையும் நடைபயணம் நடக்கிறது. அன்று இரவு செறுவாரக்கோணத்தில் ராகுல்காந்தி ஓய்வெடுக்க இருக்கிறார்.
கேரளாவுக்கு
செப்டம்பர் 11-ஆம் தேதி அங்கிருந்து பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் வசதியாக வடிவமைக்கப்பட்ட 60 கேரவன்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கேரவன்கள் ராகுல்காந்தி மற்றும் அவருடன் வருகின்ற தலைவர்கள் பயன்படுத்துவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை என பல்வேறு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டெய்னர்கள்
இந்த கேரவேன்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும். எங்கெல்லாம் இரவு ராகுல் காந்தியும், காங்கிரஸ் நிர்வாகிகள் குழுவினரும் தங்குகிறார்களோ அங்கு இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. 150 நாட்கள் நடக்கும் நடைபயணத்தின்போது தங்கும் விடுதிகளுக்காக பெரிய செலவுகளைத் தவிர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.