ரயில்வேயில் வேலை..ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்..கரூரில் ரூ.2.7 கோடி ஏமாற்றிய 3 பேர் கைது
கரூர் : கரூர் அருகே, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 45 நபர்களிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக, கரூர் மாவட்டம், அருகம்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், ரயில்வேயின் தலைமை கணக்காளராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளதாகவும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி என்பவர், மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபிசராக ரயில்வேயில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த இரண்டு நபர்களின் அடையாள அட்டையை காட்டியும், ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் பலரிடம் தனக்கு நன்கு பழக்கமாக உள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கருப்பண்ணனின் இந்த பேச்சை நம்பி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த 45 நபர்கள், 2 கோடியே ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் வேலை வாங்கி தராததோடு, வாங்கிய பணத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கருப்பண்ணன் திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரங்கநாதன் என்பவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்தது. வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்த வகையில் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளிவந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரங்கநாதனை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.