கரூர் மாணவி தற்கொலை.. நீதி வழங்குவதில் ஏன் இந்த தாமதம்?.. கொதிக்கும் அன்புமணி!
கரூர் : கரூரில் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கலையும், அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், நீதி வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
12ம் வகுப்பு மாணவி
கரூர் மாவட்டம் வெண்ணெய்நல்லூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த கடிதத்தில், பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நீண்ட காலம் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்ட எனக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் பாதியிலேயே செல்வதாகவும் எழுதியிருந்தார்.
உருக்கமான கடிதம்
மேலும் தன்னை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று இந்த கடிதத்தில் தெரிவிக்க பயமாக இருக்கிறது என்றும், யாரிடமும் சொல்லாமல் செல்வதால் குடும்ப உறுப்பினர்கள் என்னை மன்னிக்குமாறும் உருக்கத்துடன் எழுதியிருந்தார். ஏற்கனவே கோவையில் இந்த சம்பவத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாணவியின் செல்போனில் வந்த தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டு பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கரூர் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் தண்டனை வழங்கவேண்டும்
டாக்டர் அன்புமணி ராமாதஸ் தனது டிவிட்டர் பதிவில், வெண்ணெய்மலை மாணவியை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார்? என்பதை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தப்புகின்றனர்
மேலும், கோவை, கரூர், திண்டுக்கல், சென்னை என கல்விக்கூடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன செய்தாலும் சட்டத்தில் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான். இதை மாற்ற வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பகிரங்க குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், ஆனால், நீதி வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். இதுபோன்ற குற்றங்களில் அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.