3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
கரூர்: தான்தோன்றி மலையில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு பக்தர்கள் காலணியை காணிக்கையாக செலுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காலம் காலமாக பக்தர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். சிலர் பணமாகவும், சிலர் பொருளாகவும் செலுத்துகிறார்கள். திருப்பதி போன்ற கோயில்களில் முடி காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
ஆனால் இவ்வாறு காலணிகளை காணிக்கையாக செலுத்துவது தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
5 ஆண்டு வறட்சி.. தவித்த இந்தியா - போக்கிய “ஸ்கை”யின் சிக்சர் மழை.. இனி 4வது பேட்ஸ்மேன் “நோ டென்சன்”
கோயில்
கரூர் மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தான்தோன்றி மலை. இந்த மலையில் உள்ள பாறை குடையப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயிலில் பெருமாள் வீற்றிருக்கிறார். இந்த மாதிரியான அமைப்பு கொண்ட குடைவரை கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டும்தான் உள்ளன. அதாவது இந்த கோயிலின் வடிவமைப்பு மூன்று கோயிலுடன்தான் ஒத்துப்போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
திருவிழா
கி.பி 13-14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் பெருமாள் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு தாயாருக்கு என தனி சன்னிதி கிடையாது. இக்கோயிலில் புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் கொடியேற்றப்பட்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இதனையடுத்து 7வது நாளில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள்.
காணிக்கை
குறிப்பாக சுற்று வட்டாரங்களில் உள்ள காலணி தைக்கும் தொழிலாளிகள் இதில் பெரும்பான்மையாக பங்கேற்பார்கள். இவர்களின் முன்னோர்கள் இந்த திருவிழாவில் பெருமாளுக்கு காலணி செய்து காணிக்கையாக செலுத்தி வழிப்பட்டுள்ளனர். அதாவது இவர்களின் கனவில் பெருமாள் தோன்றி தனக்கு தேவையான அளவில் காலணியை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதன் பெயரில் முன்னோர்கள் காலணியை காணிக்கையாக செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
விநோத வழிபாடு
இதன் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் இம்மக்களின் கனவில் வரும் பெருமாள் காலணி கேட்பதாகவும், எனவே முன்னோர்களின் தொடர்ச்சியாக தாங்களும் காலணியை காணிக்கையாக கொடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் 3 அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட காலணியை இம்மக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த விநோத வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.