ஓபிஎஸை இயக்குவது திமுக தான்.. அதிமுக பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் சிறந்த வாய்ப்பு.. விஜயபாஸ்கர்!
கரூர்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குவது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்தும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம். பல சோதனைகளை கடந்து 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பீனிக்ஸ் பறவை போல் மீண்டும், மீண்டும் எழுந்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. தலைவருக்குப் பிறகு ஜெயலலிதா கட்டி காத்து எஃக்கு கோட்டையாக மாற்றினார்.
அதன் பின்னர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்திய தேர்தலில், 75 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிமுகவுக்கு இருக்கிறார்கள். நம்மிடம் இருந்து துரோகிகள் போகாமல் இருந்தால், தொடர்ந்து மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும்.
’கிட்டி கண்ணன்’ பொய்யும் புரட்டும்! குழப்பத்திற்கு முழு உருவம் ஓபிஎஸ்! கொந்தளித்த மதுரை ’மாஜி’!
ஈரோடு மாவட்ட இடைத்தேர்தல் மூலம் அதிமுக எவ்வளவு பெரிய இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும் போது, என் தந்தை கருணாநிதி பக்தன் என்று சொல்கிறார். இப்போது அவரை இயக்குவது திமுக தான். ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். அவர் மு.க.ஸ்டாலினை பார்த்து நல்லாட்சி நடத்துகின்றார்கள் என்று சொல்லுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த 5 ஆண்டுகளுக்கு பின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அதற்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தல் இருந்திருக்கும். ஆனால் முன்னதாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அதில் அதிமுகவின் பலம் நிரூபிக்கப்படும் என்று தெரிவித்தார்.