எனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடைபெற்றது என்று முன்னாள் அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
Recommended Video
அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராகவும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கிக் குவித்ததாக கூறி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள், வீடு, உறவினர்கள் வீடுகள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகம், தொழில் நிறுவனங்கள் என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினார்கள்.
தென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு
முக்கிய ஆவணங்கள் சிக்கின
இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்த ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இந்த சோதனைக்கு எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தன.
பழிவாங்கும் நடவடிக்கை
அரசியல் காழ்புணர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவரான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
இது தொடர்பாக கரூரில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- எனது சென்னை இல்லம், கரூரில் உள்ள இல்லம் மற்றும் பல இடங்களிலும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கையை துவங்கி உள்ளதை காட்டுகிறது. எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முறையாக ஆவணங்களை சரிபார்த்து போலீசாருக்கு வழங்கியுள்ளனர். எந்த ஆவணமும் சிக்கவில்லை. அவர்கள் பறிமுதல் செய்த பணத்திற்கும் முறையான கணக்கு உள்ளது.
பொய் வழக்கு
பொய் வழக்குகள் போட்டு, நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்து கரூரில் கட்சி மாற்றும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. கட்சித் தலைமையின் ஆலோசனையின் படி இதுதொடர்பாக நாங்கள் எந்த வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம். சென்னை மற்றும் கரூரில் எனக்கு சொந்த வீடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனக்கு சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறேன். ஆனால், பல ஆண்டுகளாக கரூரில் பல்வேறு தொழில்களை செய்தி வருகிறேன். இது அனைவருக்கும் தெரியும்.
வங்கி கணக்குகள் முடக்கம்?
பத்திரிக்கை செய்திகள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பபடுகிறது. இதற்காக வழக்கு தொடரப்படும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், வங்கி லாக்கர்கள் சோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றனவே என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு 'இல்லை' என்று ஒரே வார்த்தையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.