கல் குவாரி பற்றி புகார் சொல்லுவியா.. விவசாயியை லாரி ஏற்றி கொன்ற கும்பல்.. ஆடிப்போன கரூர்
கரூர்: கரூர் அருகே, உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதாக புகார் அளித்த விவசாயி, வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்குவாரி உரிமையாளர், வாகன ஓட்டுநர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஒருசில கல்குவாரிகள் அரசின் உரிமம் இல்லாமல் சட்டவிரோமாகவும் செயல்படுகிறது.
ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி
முன்விரோதம்
தென்னிலை பகுதியில், செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியும் உள்ளது. இந்த கல்குவாரிக்கு அருகே, கரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற விவசாயிக்குச் சொந்தமான விளை நிலங்களும் உள்ளன. நிலப்பிரச்னை காரணமாக, செல்வகுமாருக்கு, ஜெகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருந்தது.
சட்டவிரோத கல்குவாரி மூடல்
இந்நிலையில், கல்குவாரி செயல்படும் கால அவகாசம் முடிந்தும், தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செல்வகுமாருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்படுவதாக கூறி, விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில், கனிமவளத்துறை அதிகாரிகள், கடந்த தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்குச் சொந்தமான கல்குவாரியில் ஆய்வு செய்த பின்னர், சட்டவிரோதமாக இயங்கி வந்த அந்த கல்குவாரியை மூடியதாக கூறப்படுகிறது.
விவசாயி கொலை
இந்நிலையில், க.பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி ஜெகநாதன் மீது, பொலிரோ வேன் கடுமையாக மோதியுள்ளது. இந்த விபத்தில் விவசாயி ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விவசாயி ஜெகநாதனின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்குவாரி உரிமையாளர் மீது குற்றச்சாட்டு
இதனிடையே, சட்டவிரோமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமாக இருந்த விவசாயி ஜெகநாதனை, கல்குவாரி அதிபர் செல்வகுமார்தான், வாகனம் ஏற்றி கொன்றுவிட்டதாக சமூக ஆர்வலர்களும், விவசாயின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டினர். மேலும் குற்றவாளியை உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை
இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விவசாயி ஜெகநாதன் மீது வாகனம் மோதியது கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் திடீர் திருப்பதாக விவசாயியை கொலை செய்தது கல்குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்குச் சொந்தமான வாகனம் என தெரிய வந்தது. இதனையடுத்து, கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் அவரின் வாகன ஓட்டுநர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
3 பேர் சிறையில் அடைப்பு
இந்த கொலை வழக்கில், ராணிப்பேட்டை கூலிப்படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரையும் கைது செய்த போலீசார், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், அவரது வாகன ஓட்டுநர் சக்திவேல், கூலிப்படையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதாக புகார் அளித்த விவசாயி, வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.