ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டுக்கு.. கரூர் கலெக்டர் மறுப்பு.. செய்தது என்ன?.. லிஸ்ட் போட்டு விளக்கம்!
கரூர்: மத்திய அரசின் சமூக நீதி துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள் என்ற திட்டம்(ADPI) மூலம் நாடு முழுக்க மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், மூன்று சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ADIP திட்டம் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கரூரில் இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜோதிமணி எம்.பி தர்ணா
இந்த திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்காத கரூர் மாவட்ட கலெக்டர் மீது ஜோதிமணி எம்பி விமர்சனம் வைத்துள்ளார். இந்த பணிகளை செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு இடையூறு விளைவிப்பதாகவும் புகார் அளித்த ஜோதிமணி எம்.பி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகள்
இந்த நிலையில் ஜோதிமணி எம்.பி.யின் குற்றச்சாட்டை கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நான் 16.06.2021-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். அது முதலே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாதான் காரணம்
அச்சமயத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அப்போது மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவை கடந்த இரண்டு வாரங்களாக தான் முழுமையாக தளர்த்தப்பட்டன. எனவே, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்த இயலவில்லை.

காலதாமதம் நிகழவில்லை
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வாரந்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன, அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தங்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு தாங்களும்(ஜோதிமணி எம்.பி) ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை நினைவு கூற வேண்டுகிறேன். எனவே, முகாம்களை நடத்துவதில் எவ்வித காலதாமதமும் நிகழவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளி நலன்
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்திலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதோறும் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு 80% சதவீதத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் காணொளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
மேலும், மாற்றுத்திறனாளின் நலம் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கரூரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கும் விதமாக ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முகாம்களை நடத்துமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் ஒரு பகுதியான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல முகாம்கள்
எனவே, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இத்தகவல் தங்களுக்கு(ஜோதிமணி எம்.பி) உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். மேற்கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு தேவையிருப்பின் தாங்கள் கோரியது போல அலிம்கோ நிறுவனத்தின் தேர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications