தவெக மதியழகன், பவுன்ராஜை "வா, போ"னு பேசக் கூடாது! அடிக்கக் கூடாது! காவல் துறைக்கு நீதிபதி உத்தரவு
கரூர்: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைதான மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை போலீஸார் அடிக்கக் கூடாது என்றும் அவர்களை ஒருமையில் பேசக் கூடாது என்றும் காவல் துறைக்கு, கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த இவர்களை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அப்போது மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் பிரச்சார கூட்டத்திற்கு மதியழகன்தான் ஏற்பாடுகளை செய்தார் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது போல் பவுன்ராஜும் பிளக்ஸ் பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தவெக, காவல் துறை, அரசு தரப்பு என பல்வேறு தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். இவற்றையெல்லாம் கேட்ட நீதிபதி, டாப் ஸ்டாரான விஜய்யை பார்க்க 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எதை வைத்து முடிவு செய்தீர்கள் என தவெக தரப்பிடம் கேட்டார்.
அது போல் "அசாதாரண சூழல் நிலவுகிறது என தெரிந்தும் பிரச்சாரத்தை ரத்து செய்ய உத்தரவிடாதது ஏன்" என போலீஸாருக்கும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விசாரணையில் மதியழகன், பவுன்ராஜிடம், "போலீஸ் உங்களை அடித்தார்களா" என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் இருவரும், "எங்களை போலீஸார் அடிக்கவில்லை, ஆனால் வா, போ என மரியாதையில்லாமல் ஒருமையில் பேசுகிறார்கள்" என்றனர்.
இந்த நிலையில் நீதிபதி பரத்குமாரிடம் பல்வேறு ஆவணங்களை தவெக தரப்பினரும் காவல் துறையினரும் தாக்கல் செய்த நிலையில் இந்த ஆவணங்களை விடுங்கள். நான் என் மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் என கூறி விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தவெக நிர்வாகிகளை தாக்கக் கூடாது என்றும் அவர்களை வா, போ என ஒருமையில் பேசக் கூடாதும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications