கரூர் மக்களுக்கு வரப்போகுது சூப்பர் அறிவிப்பு.. அமைச்சரே வெளியிட்ட தகவல்.. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கிறார்?
கரூர்: கரூர் நகரில் கொசுவலை பேருந்து கட்டும் தொழில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி ஆகியவை சிறந்து விளங்குவதால் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 121 நகராட்சிகள் உள்ளன. இதில் மிகவும் பழமையான மற்றும் அதிக வருவாய் தரும் நகராட்சிகளில் முக்கியமானது கரூர். நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று. கடந்த 1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சி உருவானது.
அதிகப்படியான தொழிற்சாலைகள், மக்கள் தொகை பெருக்கம், வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கரூர் பெருநகராட்சி (அ) சிறப்பு நிலை நகராட்சி என்ற அந்தஸ்தை 1988லேயே பெற்றுவிட்டது. கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர்.

மாநகராட்சி
2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் கரூர் நகராட்சியின் பரப்பளவு 6.03 ச.கி.மீட்டரில் இருந்து 53.26 ச.கி.மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும் உயர்ந்தது.. மக்கள்தொகை 2.14 லட்சமாக உயர்ந்தது. இப்போது 2021 என்கிற நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. மக்கள் தொகை பெருக்கம் அப்படியே இருமடங்கு ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது.

மாநகராட்சியாகும் கரூர்
இந்நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை போட்டியிட்ட செந்தில் பாலாஜி, கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதி விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பேட்டியின் போது மாநகராட்சியாக மாறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பங்கேற்பு
கரூர் நகராட்சிக்குட்பட்ட கோவூர் வையாபுரி நகர் அண்ணா நகர் நகரில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களை நேரில் சந்திப்பதற்காக மக்கள் சபைக்கூட்டத்தினை கூட்டினார். அந்த கூட்டத்தில் மனுக்களை பெற்று குறைகளையும் கேட்டறிந்தார்.

அமைச்சர் தகவல்
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகரில் கொசுவலை பேருந்து கட்டும் தொழில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி ஆகியவை சிறந்து விளங்குவதால் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

நீண்ட நாள் கோரிக்கை
மேலும் மக்கள் சபைக் கூட்டத்தின் மூலம் 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன இந்த மனுக்களை உரிய துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சபை கூட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் மனுக்களை பெரும் நிகழ்ச்சியானது கரூர் நகரில் முடிக்கப்பட்ட பிறகு, கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற மூன்று தொகுதிகளிலும் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறப்படும். அதன் மூலம் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றார். கரூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. 2013 அல்லது 2014ம் ஆண்டிலேயே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விரைவில் இந்த கோரிக்கை நிறைவேறப்போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications