முருங்கைப் பூ இட்லி.. முருங்கை கீரை வடை! இன்னைக்கு ஒரு புடி! கரூரில் ருசி பார்த்த 3 அமைச்சர்கள்!
கரூர்: கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர்களுக்கு முருங்கையில் தயாரிக்கப்பட்டிருந்த இட்லி, வடை, பாயாசம் உள்ளிட்ட பண்டங்கள் வழங்கப்பட்டன.
அவற்றை ருசி பார்த்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, தாமோ அன்பரசன் ஆகியோர் ஸ்டால் உரிமையாளர்களை பாராட்டினர்.
இதனிடையே கரூரில் விரைவில் முருங்கைப் பூங்கா அமைக்கப்படும் என்ற உறுதியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கியுள்ளார்.

முருங்கை சாகுபடி
மனிதர்களுக்கு இரும்புச் சத்தை இயற்கையாகவே கொடுக்கக் கூடிய உணவு வகைகளில் முருங்கைக் கீரை முதலிடத்தில் உள்ளது. முருங்கைப் பூ, இலை, காய் என அனைத்தும் மனிதர்களுக்கு தேவையான இன்றியமையாத பல சத்துக்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் கரூர் மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் முருங்கை சாகுபடியை காணமுடியும். அந்தளவுக்கு கரூர் மாவட்டம் முழுவதும் முருங்கை சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

முருங்கைக் கீரை
கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் சர்வதேச முருங்கைக் கண்காட்சிக்கு மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறை அமைச்சகமும் இணைந்து சர்வதேச முருங்கைக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை இன்று தொடங்கியுள்ளது. அதனை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, தாமோ அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

3 அமைச்சர்கள்
கண்காட்சி அரங்கை சுற்றிப்பார்த்த அமைச்சர்களுக்கு அங்கு ஸ்டால் அமைத்திருந்தவர்கள் முருங்கை மூலம் தயாரிக்கப்பட்ட பாயாசம், இட்லி, வடை, உள்ளிட்ட சிற்றூண்டிகளை வழங்கினர். அவற்றை ருசி பார்த்த அமைச்சர்கள் இது போன்ற இயற்கை முறையில் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை தயரிக்கும் முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். இதேபோல் முருங்கைக் கீரைகளை எவ்வாறு பாதுகாப்பாக ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றியும் கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

முருங்கைப் பூங்கா
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் ம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கரூரில் விரைவில் முருங்கைப் பூங்கா அமைக்கப்படும் என்ற உறுதியை வழங்கினார். கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலகின் பல நாடுகளை சேர்ந்தோரும் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications