இந்த மூட்டைய வச்சுகிட்டு பைக் குடுங்க! 8 மூட்டை 10 ரூபாய் காயின்கள்..ஊழியர்களை தெறிக்க விட்ட ராஜீவ்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 10 ரூபாய் நாணயங்களை 8 பைகளில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்த இளைஞர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜீவ் , அப்பகுதியிலுள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட பைக்கை வாங்க விரும்பினார்.
இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் பேருந்துகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால் பலரும் கடும் அவதியடைந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

10 ரூபாய் நாணயம்
அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை செல்லுபடியாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பைக்கை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெற வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக இதற்காக நாணயங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரித்து வந்துள்ளார்.

புது பைக்
தனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள் பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்துள்ளார் ராஜீவ். போதுமான அளவு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்த நிலையில், நேற்று அவற்றை 8 பைகளில் கட்டிக்கொண்டு ஓசூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார்.

8 மூட்டை
அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்தனர். மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து, பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரைக்கம்பளத்தில் கொட்டி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பணம் 3 மணி நேரம் எண்ணப்பட்டு, அதில் தவணைத்தொகை 1,80,000 ரூபாய் இருந்ததையும், மீதித்தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதியளித்ததையும் ஏற்றுக் கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் அப்பாச்சி ஆர்.ஆர்.310 என்ற புதிய பைக்கை அவரிடம் ஒப்படைத்தனர்.

விழிப்புணர்வு தேவை
அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். இந்த ருசிகர சம்பவத்தால் ஷோரூம் பகுதியில் கலகலப்பு நிலவியது. கடந்த சில வருடங்களாகவே 10 ரூபாய் நாணயங்களை சில பகுதிகளில் வாங்குவதில்லை என்பதும், இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இளைஞர் 10 ரூபாய் நாணயங்களை வைத்து பைக் வாங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications