இடைத்தேர்தலே தேவையற்ற ஒன்று.. ஒரு எம்எல்ஏ-வால் அரசியல் மாற்றம் வருமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் சூழல் வராவிட்டால், இடைத்தேர்தல் என்பது தேவையற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த ஒரு எம்எல்ஏ-வால் எந்த அரசியல் மாற்றமும் வரப்போவதில்லை என்று கூறிய அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தல் காரணமாக அமைச்சர்களின் நேரம் வீணடிக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக கூறியதோடு, வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது. அதேபோல் அமமுக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளார்.
என்ன கொடுமை இது? அதிக மது விற்பனை செய்தவருக்கு பாராட்டு! தமிழ்நாடு எங்கே போகிறது? -அன்புமணி கேள்வி
களத்தில் இருந்து விலகிய பாமக
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்து பாமக விலகியதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வந்த பாமக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்தும் பாமக விலகி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாராயம் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு விருது வழங்குகிறார். அதே நாளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் மது அதிகளவில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழை, மாவட்ட ஆட்சியர் வழங்குகிறார்.
இடைத்தேர்தல் தேவையற்றது
மதுவிலக்கு கொண்டு வருவதில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, கொள்கை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். மது, போதைப்பொருள், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ அல்லது இரண்டு எம்எல்ஏ-க்களால் பெரும்பான்மை இழக்கும் சூழலில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை விடுத்து மற்ற நேரங்களில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று.
அரசியல் மாற்றம் வருமா?
அது நேரம், காலம், பொருளை வீணடிக்கும் செயல். சுயேட்சை எம்எல்ஏ-க்கள் இல்லாமல் கட்சியை சார்ந்த எம்எல்ஏ-க்கள் உயிரிழந்தால், அந்த கட்சியைச் சேர்ந்த வேறொருவரை நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இதனை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருகிறது. இடைத்தேர்தலை காரணமாக வைத்து, அமைச்சர்கள் ஒரு மாதத்தை வீணடிப்பது தேவையில்லாத ஒன்று. இந்த ஒரு எம்எல்ஏ-வால் தமிழ்நாட்டில் எந்த அரசியல் மாற்றமும் வரப் போவதில்லை என்று கூறினார்.