இந்த பாம்புதான் கடிச்சிடுச்சு.. கவரில் போட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்த போதை ஆசாமி.. பரபரத்த கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தன்னை கடித்த பாம்பை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மது குடித்து விட்டு போதை ஆசாமிகள் செய்யும் சாகசங்கள் அவ்வப்போது முகம் சுளிக்கும் வகையிலும் சிரிப்பையும் ஒரே சேர வரவைப்பதாக அமைந்து விடுகிறது.
போதையில், வருகிறவர் போகிறவர் என அனைவரையும் வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக்கொள்வது, சாலையில் படுத்து தூங்குவது.. ஓடுகிற பஸ்சை குறுக்கே சென்று மறிப்பது என போதையில் மதுப்பிரியர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் அளவே இல்லாதது.

முழு போதையில்..
சில நேரம் மதுபோதையில் வம்பை இழுத்து விட்டு வசமாய் வாங்கிக் கட்டும் நபர்களும் இருக்கிறார்கள். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து விட்டு தெளிந்த பிறகு புலம்பி தீர்ப்பது சிலருடைய வாடிக்கையாகவும் இருக்கிறது. அண்மையில் கூட முழு போதையில் ஒருவர் ஓடும் பேருந்தின் குறுக்கே நின்று மறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

3 வயது மகளுடன்..
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் போதை ஆசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக காவல் நிலையம் வந்துவிட்டு கடித்த பாம்பையும் தனது கையோடு எடுத்து வந்தது போலீசாரை ஒரு நிமிடம் பதற வைத்தது. இத்தனைக்கும் தனது 3-வயது மகளுடன் இப்படி தலைகால் புரியாமல் அந்த போதை ஆசாமி வந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காவல் நிலையம் நோக்கி
கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுக்கா காவல் நிலையத்தில் எப்போதும் போல பணிகள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. அப்போது தனது 3-வயது மகளுடன் கையில் ஒரு பச்சை நிற கவரையும் வைத்துக்கொண்டு ஒருவர் வந்தார். காவல் நிலையம் நோக்கி அந்த நபர் சென்றதை பார்த்து புகார் கொடுக்கத்தான் செல்கிறார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்து இருக்கலாம்.

பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொண்டு
ஆனால், தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும் கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்திருப்பதாகவும் கூறி , பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொண்டு வந்த பாம்பை காட்டி போலீசாரை பதற வைத்தார். முழு போதையில் இருந்த அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்த பெண் போலீஸ் ஒருவர், அங்கிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்தார். ஆட்டோ வந்ததும் அவரது 3-வயது மகளுடன் அரசு மருத்துவமனைக்கு போதை ஆசாமியை அனுப்பி வைத்தார்.

சிகிச்சை பெற்று குணம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த அந்த போதை ஆசாமி.. மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தப்பிச்சென்றுள்ளார். இந்த நபரின் விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கருத்து
மதுபோதையால் தன்னை மறந்து இப்படி ஆபத்தான அட்டகாசங்கள் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் சமூக ஆர்வர்வலர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் தனி மனித ஒழுக்கமும் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு நபரும் செயல்படும் போதுதான் இதுபோன்ற அவலங்களை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.












Click it and Unblock the Notifications