முனுசாமியை தோற்கடிக்க 4 கோடி செலவு செஞ்சாங்க.. ஓபிஎஸ் அணிக்குத் தாவிய மாஜிக்கள் மீது ‘பகீர்’ புகார்!
கிருஷ்ணகிரி : கே.பி.முனுசாமியையும், தன்னையும் தோற்கடிக்க ரூ.4 கோடி செலவு செய்தவர்கள் இன்று ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ அசோக் குமார் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளனர் என கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் இருந்து 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டு தோற்கடிக்க முயன்றதாக அதிமுக மா.செ குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் சாதிப்பெயரை சொல்லி கொச்சையா பேசினார்.. கே.பி.முனுசாமி மீது 'பகீர்’ குற்றச்சாட்டு!
ஓபிஎஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், சூளகிரி ஒன்றிய சேர்மன் ஹேம்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து சமீபத்தில் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். கே.பி.முனுசாமியின் மாவட்டத்தைச் சேர்ந்த 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்தது ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவிந்தராஜ், "கிருஷ்ணகிரியில் இருக்கும் கருங்காலிகள் இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்" என விமர்சித்தார்.
ஈபிஎஸ் ஆதரவு மா.செ
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்று விட்டு கிருஷ்ணகிரி அதிமுகவை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது என கிருஷ்ணகிரி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அசோக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் குமார், ஓபிஎஸ் பக்கம் சென்ற நிர்வாகிகளை சாடிப் பேசியுள்ளார்.
குழிதோண்டி
செய்தியாளர்களிடம் பேசிய அசோக் குமார், "கடந்த நான்கு நாட்களுக்கு முன் இந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராஜ், இந்த மாவட்டத்தில், அ.தி.மு.க குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.
அதிமுக வெற்றி
ஆனால், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும், அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில், தி.மு.க வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்தத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வென்றுள்ளது.
முனுசாமிக்கு எதிராக 4 கோடி
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு நாள் கூட முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி அகியோர் வாக்கு சேகரிக்க வரவில்லை. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் திமுகவுக்கு ஆதரவாக செலவு செய்து கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இவர்கள்.
ஓரங்கட்டப்பட்டவர்கள்
கட்சிக்காக உழைக்காமல் இருந்ததால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ஒன்றிய செயலாளர்கள், 2 பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.