'கடைசியில் இப்படி பேசிட்டியேடா'...மூத்த மகன் பேச்சால் மனமுடைந்த தம்பதி தற்கொலை.!
கிருஷ்ணகிரி: மூத்த மகன் கடுமையாக பேசியதால் மனமுடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நெஞ்சை உருக்கும் இந்த சோக சம்பவம் பின்வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தாமணி. இவர்களுக்கு ரவீந்தரன் (28) சூர்யா (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். விவசாயியான முருகேசன், மூத்த மகன் ரவீந்தரனுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனால் பல இடங்களில் தேடியும் அவருக்கு பொருத்தமான மணமகள் கிடைக்கவில்லை

அடிக்கடி தகராறு
அதே வேளையில் இளைய மகன் சூர்யாவுக்கு திருமணம் கூடி வந்தது. இதனால் சூர்யாவுக்கு திருமணத்தை முடுத்து வைத்துவிட்டார். இதனை தொடர்ந்து மூத்த மகன் ரவீந்தரனுக்கு தொடர்ந்து வரன் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு பெண் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இது தொடர்பாக ரவீந்தரனுக்கும், அவரது தாய், தந்தையான முருகேசன், சாந்தாமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடுமையாக பேசினார்
''தம்பிக்கு மட்டும் உடனடியாக பெண் பார்த்து கல்யாணம் முடித்து விட்டீர்கள். எனக்கு ஏன் பார்க்க முடியவில்லை'' என்று ரவீந்தரன் தாய், தந்தையிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவும் ரவீந்திரனுக்கும். முருகேசன் சாந்தாமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கடும் வாக்குவாதமாக முற்றிய நிலையில், ரவீந்திரன் தாய், தந்தை இருவரையும் மிகக் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

மன வேதனை
''சிறு வயதில் சீராட்டி, தாலாட்டி வளர்த்த மகன் இப்படி பேசி விட்டானே'' என்று முருகேசனும், சாந்தாமணியும் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளனர். ''மகன் இப்படி பேசி விட்டான். இனி உயிர்வாழ்ந்து என்ன செய்ய போகிறோம்'' என்று நினைத்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

பூச்சி மருந்து குடித்தனர்
இதனை தொடர்ந்து முருகேசன், சாந்தாமணி இருவரும் நேற்று இரவு கீழ்குப்பம் சுடுகாட்டிற்கு சென்றனர். தாங்கள் கையுடன் கொண்டு சென்ற பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு கீழ்குப்பம் பகுதியில் நல்ல மழை பெய்த காரணத்தால் யாரும் வெளியே நடமாடவில்லை. இதனால் இருவரும் இறந்து கிடப்பது யாருக்கும் தெரியவில்லை.

பெரும் சோகம்
இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் சுடுகாட்டில் கணவன்-மனைவி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் கீழ்குப்பம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications