தூக்கத்தில் 'ஹார்ட் அட்டாக்'.. எஜமானரை காப்பாற்றிய புத்திசாலி பூனை.. நெகிழ்ச்சியூட்டும் பின்னணி தகவல்!
லண்டன்: இங்கிலாந்தில் பூனை ஒன்று, 'ஹார்ட் அட்டாக் வந்த எஜமானரை உரிய நேரத்தில் தட்டி எழுப்பி அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் பூனைக்கு எப்போதும் ஒர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் எலிகளை வேட்டையாடுவதவற்காகவே பெரும்பாலும் பூனைகள் வளர்க்கப்பட்டன.
ஆனால் தற்போது மியாவ்... மியாவ்... என வளர்ப்பவரின் காலையே சுற்றி வரும் பூனைகளை, தங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பாவித்து வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

எஜமானி உயிரை காப்பாற்றிய பூனை
உலகில் தற்போது மொத்தம் 73 வகையான இனங்கள் உள்ள பூனைகள் செய்யும் குட்டிச்சேட்டைகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கும். ஒரு சில நேரங்களில் நாய்கள் தங்களது எஜமானை, குழந்தைகளை ஆபத்தில் இருது காப்பாற்றும் வீடியோக்களை பார்த்திருப்போம். அந்த வகையில் இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பகுதியில் உள்ள ஒரு பூனை ஒன்று, சாதுர்யமாக செயல்பட்டு தனது எஜமானியின் உயிரை காப்பாற்றியுள்ளது. நெகிழ்ச்சியூட்டும் இந்த சம்பவத்தின் முழு விவரம் வருமாறு:-

செல்லமாக வளர்ந்த பில்லி
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பகுதியை சேர்ந்தவர் சாம் ஃபெல்ஸ்டெட். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். பில்லி என்ற பெயர் வைக்கப்பட்ட 7 வயதான அந்த பூனையை தனது வீட்டில் ஒருவர் போலவே செல்லமாக வளர்த்து வந்துள்ளார் சாம் ஃபெலஸ்டெட். மேலும் அவர் அதற்கு பிடித்தமான பால் உள்ளிட்டவற்றை ஊட்டி ஆசை ஆசையாய் வளர்த்து வந்தார். பூனையும் எப்போதும் அவரையே சுற்றி சுற்றி வரும். இதேபோல் வழக்கம் போல இரவு நேரத்தில் ஃபெல்ஸ்டெட் பெட் ரூமிலேயே பில்லியும் படுத்து உறங்கும்.

காதில் வந்து கத்தியது
இப்படிதான் ஒருநாள் 42 வயதான ஃபெல்ஸ்டெட் இரவு தூங்கிக்கொண்டு இருக்கும் போது, பூனை தீடிரென மியாவ்.. மியாவ்... என்று காதில் வந்து கத்திக்கொண்டே இருந்தது. தனது முன்கைகளால் ஃபெல்ஸ்டெடை தட்டிக்கொண்டு அபயக்குரல் எழுப்பியது. பில்லி ஒருநாளும் இப்படி கத்தாதே... என்று எண்ணி ஃபெல்ஸ்டெட் எழுந்திருக்க முயற்சி செய்தார். ஆனால், அவரால் எழுந்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு நெஞ்சு வலி இருந்ததோடு, உடல் முழுவதும் வியர்வை கொட்டியிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஃபெல்ஸ்டெட் தனது தாயாரை உதவிக்கு அழைத்தார்.

நெகிழ்ந்துபோன எஜமானி
இதையடுத்து ஃபெல்ஸ்டெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாகவும் உரிய நேரத்தில் வந்ததால் உயிரை காப்பாற்ற முடிந்ததாகவும் தெரிவித்தனர். இதனால், ஒருபக்கம் அதிர்ச்சி அடைந்தாலும் தனது உயிரை பில்லி (பூனை) காப்பாற்றியதை நினைத்த ஃபெல்ஸ்டெட் நெகிழ்ந்து போகினார்.

நான் இறந்துகூட போயிருக்கலாம்
இது குறித்து அவர் கூறுகையில், ''நான் தூங்கும் போது எந்த அசவுகரித்தையும் உணரவில்லை. ஆனால் திடீரென பில்லி எனது நெஞ்சு அருகே வந்து கத்திக்கொண்டே இருந்தது. வழக்கமாக பில்லி அவ்வாறு செய்யாது. அதனால் நான் திடுக்கிட்டு எழுந்தேன். உண்மையில் எனது உயிரை காப்பாற்றவே பில்லி அவ்வாறு செய்து இருக்கிறது. பில்லி எப்போதும் என்னுடன் தான் இருக்கும். பூனை என்னை எழுப்பி விடாமல் இருந்திருந்தால் நான் இறந்துகூட போயிருக்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications