"இதுதான் கோழைத்தனம்.." சீன விவகாரத்தில் ஜெய்சங்கரின் பேச்சு.. ராகுல் சொன்ன வார்த்தை! கடும் தாக்கு
ராகுல் காந்தி பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இதற்கிடையே லண்டனில் பேசிய ராகுல் காந்தி, சீன விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய கருத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி இப்போது தான் நாடு முழுக்க பாத யாத்திரையை முடித்திருந்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைந்தது. இதற்கு நாடு முழுக்க மிகச் சிறப்பான ஒரு வரவேற்பு இருந்ததாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
பாத யாத்திரையை முடித்துக் கொண்ட பிரிட்டன் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். தொடர்ச்சியாக அவர் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

கோழைத்தனம்
லண்டனில் பேசிய ராகுல் காந்தி, "சீனா நம்மை விட பலம் வாய்ந்தது என்று வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.. அவர்களுடன் எப்படி சண்டை போட முடியும் என்ற ரீதியில் அவரது பேச்சு இருக்கிறது. இந்த சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம் தான்... ஆங்கிலேயர்கள் நம்மை விட வலிமையானவர்களாக இருந்தார். அதனால் நாம் அவர்களுடன் சண்டை போட்டு விடுதைப் பெறவில்லையா... நமது நாட்டில் இன்னுமே பல பிரச்சினைகள் இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது, வீதியில் நடக்கவே பயப்படுவதாகப் பெண்கள் கூறுகின்றனர்.

ஓரிரு பிஸ்னஸ்மேன்கள்
நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. விலைவாசி அதிகரித்துள்ளது. ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு பேர் தான் ஒட்டுமொத்த பிஸ்னஸையும் கட்டுப்படுத்துகிறார்கள். அவர் சமீபத்தில் பிரபலமாகிவிட்டார், அவரது செல்வம் குறித்த ரிப்போர்ட்களை நீங்கள் பார்க்கலாம். இதனால் இந்திய மக்கள் தங்கள் செல்வத்தை இழந்துள்ளனர். அதேநேரம் ஒரு நபர் தனது அரசியல் தொடர்புகளால் அனைத்து பணத்தையும் சம்பாதிக்கிறார்" என்று அவர் கூறியிருந்தார்.

பாஜகவுக்குப் பதிலடி
முன்னதாக ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, அவர் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியா குறித்து அவதூறு பரப்புவதாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், பாஜகவின் இந்த விமர்சனத்திற்கும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் சாதனைகளைத் தனது வெளிநாட்டுப் பயணங்களில் இழிவுபடுத்தியே பிரதமர் நரேந்திர மோடி தான் என்று அவர் விமர்சித்தார். இது தொடர்பா அவர் மேலும் பேசுகையில், "கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி.. சுதந்திரம் அடைந்து 60, 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று கூறியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.

திரிக்க முயல்கின்றனர்
பல ஆண்டுகள் இப்படித் தொலைந்து போனதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வரம்பற்ற ஊழல் இருக்கிறது என்று அவர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு தான் பிரதமர் மோடி இப்படிப் பேசினார். அதேநேரம் என் நாட்டை நான் ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை. நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். எனது பேச்சை பாஜக திரிக்க முயல்கிறது. அவர்களால் முடிந்ததைச் செய்யட்டும்.. பார்த்துக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதித்ததே பிரதமர் மோடி தான். அதுதான் உண்மை..

பிரதமர் மோடி பேச்சு
சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களையும் அவர் இழிவுபடுத்தியுள்ளார்" என்றார். கடந்த 2015இல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் பேசியதை அவர் குறிப்பிட்டார். அந்தாண்டு தென் கொரியாவில் பிரதமர் மோடி,"ஒரு காலத்தில் இந்தியாவில் பிறந்ததே நல்லதில்லை என்று நினைத்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.. ஆனால், இப்போது அவர்களின் மனநிலை மாறியுள்ளது. குறைவான ஊதியம் என்றாலும் ஓகே என அவர்கள் இந்தியா வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

கடும் விமர்சனம்
இதைக் குறிப்பிட்டே ராகுல் காந்தி பேசியிருந்தார். மேலும், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகக் குறிப்பிட்ட ராகுல், பல அரசியல்வாதிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் தான் கண்காணிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும், இந்தியாவில் ஊடகங்கள், நீதித்துறை கட்டுப்படுத்தப்படுவதாகவும், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications