ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கும் நாடுகள்...பங்கேற்காத நாடுகள்...அட இவரு கூட வரமாட்டாரா?
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் மற்றும் ராஜ குடும்பத்தின் தலைவர்கள் லண்டன் வந்துள்ளனர்.
ஆனால் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல பங்கேற்றுள்ளவர்களில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.

ராணியின் மறைவு
சுமார் 60 ஆண்டுகளாக பிட்டனின் ராணியாக இருந்தவர்தான் இரண்டாம் எலிசபெத். சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இவர், உயிரிழந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. சிலர் அவரது மறைவை கொண்டாடவும் செய்தனர். இப்படி இருக்கையில் ராணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை

இறுதி சடங்கு
கடந்த 2019ல் ஜப்பானின் பேரரசராக பதவியேற்றுக்கொண்ட நருஹிட்டோ மற்றும் பேரரசி மசாகோ ஆகியோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பேரரசராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுதான். மேலும், டச்சு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா மற்றும் பட்டத்து இளவரசி பீட்ரிக்ஸ், பெல்ஜிய மன்னர் பிலிப், நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் மற்றும் மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் ஆகியோர் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கும் நாடுகள்
அதேபோல டென்மார்க்கின் ராணி மார்கிரேட், ஸ்பெயினின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி லெடிசியா, ஃபிலிப்பின் தந்தையும் முன்னாள் மன்னருமான ஜுவான் கார்லோஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, சீன துணை ஜனாதிபதி வாங் கிஷான், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இஸ்ரேல் நாட்டின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு
உலகின் பல முக்கிய தலைவர்கள் இந்த இறுதி சடங்கில் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது லண்டனில் உள்ளனர். இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சுமார் 2,000 பேர் வரை தங்கலாம். இங்கு இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ராணி இரண்டாம் எலிசபெத்தை இன்னமும் தங்களது நாட்டின் ராணியாக கருதும் நாடுகளின் பிரதமர்களும், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள்.

அழைப்பு விடுக்கப்படாத நாடுகள்
ஈரான், நிகரகுவா, வடகொரிய நாடுகளிலிருந்து ராணியின் இறுதி சடங்கிற்கு யாரும் அழைக்கப்படவில்லை. ரஷ்யா-உக்ரைன் போர் காணமாக ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ராணியின் இறுதி சடங்கிற்கு ரஷ்யாவிலிருந்து யாரும் அழைக்கப்படாதது ரஷ்யாவை அவமானப்படுத்தியது போன்றதாகும் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ரஷ்ய அதிபர் புதின், போரில் ஈடுபட்டதற்காக இங்கிலாந்தில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரால் இதில் பங்கேற்க முடியாது. மேலும், ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா மற்றும் வெனிசுலா நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications