இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? முக்கிய கட்டத்தை தாண்டிய ரிஷி சுனக்.. இந்த முறை வாய்ப்பு கிட்டுமா
லண்டன்: இங்கிலாந்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததால், புதிய பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர் சர்ச்சைகளில் சிக்கியதால் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரித்தது.

லிஸ் டிரஸ் ராஜினாமா
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து பிரதமரை தேர்வு செய்தனர். இறுதி கட்டங்களில் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்த லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்பட்டார். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை வெறும் 45 நாட்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு லிஸ் டிரஸ் தள்ளப்பட்டார். பொருளாதார பிரச்சினைகள் மற்றும் மினி பட்ஜெட் தாக்கல் செய்ததில் எழுந்த எதிர்ப்பு அழுத்தம் காரணமாக தடாலடியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

100 எம்.பிக்கள் ஆதரவு வேண்டும்
இதையடுத்து, அடுத்த தலைவரை ஒருவாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய லிஸ் டிரஸ் அதுவரையில் பிரதமர் பொறுப்பில் நீடிப்பதாக தெரிவித்தார். ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இங்கிலாந்தின் அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் (பிரதமர் ) யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் நீடிக்க குறைந்தது 100 எம்.பிக்கள் ஆதரவு வேண்டும்.

ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 300-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ளதால் 3 பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் இறங்க முடியும். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு 100 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. ரிஷி சுனக்கிற்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட நினைக்கும் பிற வேட்பாளர்களுக்கு 100 எம்.பிக்கள் ஆதரவு கூட கிடைக்காவிட்டால் தானாகவே ரிஷி சுனக் பிரதமராக முடியும்.

போரீஸ் ஜான்சன் வலியுறுத்தல்
அதேவேளையில் முதல் முறையாக பிரதமர் பதவிக்கான ரேசில் இறங்கப்போவதாக முதல் ஆளாக அறிவித்த பென்னி மோர்டாண்டுக்கு தற்போது வரை 22 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. மீண்டும் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான கோதாவில் இறங்கியுள்ள போரிஸ் ஜான்சனுக்கு 48 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. அதேவேளையில் நெருக்கடியை தவிர்க்க ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் தேர்வு எப்படி
பிரதமர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டால் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் முதலில் வாக்களிப்பர். 3 பேரில் குறைவான வாக்குகளை பெற்றவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்பிறகு ஆன்லைன் முறையில் நடைபெறும் வாக்கெடுப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் வாக்களித்து பிரதமரை தேர்வு செய்வர்.

28-ஆம் தேதி முடிவு
இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான ரேசில் போரிஸ் ஜான்சனுக்கும் ரிஷி சுனக்கிற்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது வரும் 28 ஆம் தேதிக்குள் தெரிந்துவிடும். கடந்த முறை பிரதமர் பதவிக்கான ரேசில் பின் தங்கிய நிலையில், இந்த முறை ரிஷி சுனக்கிற்கு இந்த வாய்ப்பு கிட்டுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கருத்து கணிப்பில் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு
ஒபினியம் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின் படி, போரிஸ் ஜான்சனை விட ரிஷி சுனக் அல்லது மொரண்ட்டுக்கே ஆதரவு அளிப்போம் என்று கட்சி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர் என்றும் ரிஷி சுனக் - போரீஸ் ஜான்சன் இடையே போட்டி ஏற்பட்டால் 44 சதவிகிதம் பேர் ரிஷி சுனக்கிற்கும் 31 சதவிகிதம் பேர் போரிஸ் ஜான்சனுக்கும் ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications