இங்கிலாந்தில் அதி உச்சம்... ஒரே நாளில் 1,19,789 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,19,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 147 பேர் கொரோனாவால் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 16-ந் தேதி 87,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று இங்கிலாந்தின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இங்கிலாந்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 1,06,122 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 140 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இங்கிலாந்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,47,473 ஆக பதிவாகி இருந்தது. இங்கிலாந்தின் கொரோனா மரணங்கள் 1,47,573 ஆகவும் இருந்தது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,32,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக இங்கிலாந்தின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்ததாக பதிவாகி இருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,19,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒருநாளில் 147 பேர் கொரோனாவால் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 53% கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. கொரோனா மரணங்கள் 2.4% அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது.
வெளிநாடு & வெளிமாநிலங்களில் இருந்து ரிட்டன்.. தமிழகத்தில் உயரும் கொரோனா - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?