"20 கோடி.." ட்விட்டரில் ஹேக்கர்கள் கைவரிசை.. மிக பெரிய ஹேக்கிங் சம்பவம்! கையை பிசையும் எலான் மஸ்க்
லண்டன்: சர்வதேச அளவில் இருக்கும் மிகப் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தில் மிகப் பெரிய ஹேக்கிங் நடந்துள்ளதாகவும் இதில் சுமார் 20 கோடி பயனாளர்களின் டேட்டா லீக் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே நடந்து வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.
அதேபோல ஹேக்கர்களின் கைவரிசையும் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் ஹேக்கிங் நடந்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பிஎஃப் 7ஐ இம்போர்ட் செய்யும் இந்தியர்கள்! இத்தனை பேருக்கு பாதிப்பா? மீண்டும் கட்டுப்பாடுகள்?
20 கோடி பேர்
அதிலும் குறிப்பாகப் பெரிய டெக் நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஹேக்கிங் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனிடையே ட்விட்டர் தளத்தின் 20 கோடி அதிகமான பயனர்களின் மின்னஞ்சல் தகவல்களை ஹேக்கர்கள் திருடி, அதை ஆன்லைன் ஹேக்கிங் தளத்தில் வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் துரதிஷ்டம் என்னவென்றால், இந்த சம்பவம் இத்துடன் நிற்காது. இதில் உள்ள மெயில் ஐடிக்களை எடுத்து மேலும் பல ஹேக்கிங் சம்பவங்கள் நடக்கும். இவை ஹேக்கிங், ஃபிஷிங் மற்றும் டாக்சிங்கிற்கு வழிவகுக்கும்.
ட்விட்டர் மவுனம்
இணைய உலகில் இதுவரை நடந்த மிகப் பெரிய ஹேக்கிங் சம்பவங்களில் ஒன்றாக இது உள்ளதாக இஸ்ரேலிய இணையப் பாதுகாப்பு-கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும், எங்கிருந்து இந்த டேட்டாக்களை அவர்கள் திருடியுள்ளனர் என்பது குறித்த தகவல்களும் தெளிவாக இல்லை. இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டர் விசாரணை நடத்தியதாகவோ அல்லது சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
மிகப் பெரிய அட்டாக்
அதேநேரம் இந்த ஹேக்கர்கள் வெளியிட்ட தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்பதை யாராலும் சரிபார்க்க முடியவில்லை. மேலும், இவை ட்விட்டர் தளத்தில் இருந்து வந்தது என்பதையும் யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும், கடந்த புதன்கிழமை இரவு முதலே இந்த டேட்டாக்கள் இணையத்தில் சுற்றி வருகிறது. இவை குறித்த ஸ்கிரீன் ஷாட்களும் ஆன்லைனில் பரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தகவல்களைப் பார்க்கும்போது, இவை ட்விட்டரில் இருந்து ஹேக் செய்யப்பட்டது போலத் தெரிவதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எப்போது
இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் இருப்பிடம் குறித்த தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எலான் மஸ்க்கை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். அவர் எடுக்கும் குளறுபடியான முடிவுகளே இதற்குக் காரணம் என்றும் பலரும் சாடி வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் இந்த ஹேக்கிங் 2021ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்றும் இப்போது இதன் தரவுகளை அவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
நடவடிக்கை
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் சுமார் 40 கோடி மெயில் ஐடி, மொபைல் எண்கள் ஹேக் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் நடந்துள்ள இந்த மிகப் பெரிய ஹேக்கிங் ஒழுங்குமுறை ஆணையங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் அவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் ஐரோப்பியத் தரவு பாதுகாப்பு விதிகள் மற்றும் அமெரிக்கத் தரவு பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளனர்.
தரவு பாதுகாப்பு
பெரிய டெக் நிறுவனங்களில் இதுபோன்ற ஹேக்கிங் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பெரும்பாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, பெரு நிறுவனங்கள் மவுனம் சாதித்தே வருகிறது. இதுபோன்ற ஹேக்கிங் தொடர்வது, பயனாளர் தரவு பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தரவு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.