பூஸ்டர் தடுப்பூசியால் இவ்வளவு நன்மையா.. பளிச்சுன்னு தெரியுதே.. அப்போ தயக்கமே தேவையில்லை மக்களே!
லண்டன்: இந்தியாவில் வரும் ஜன. 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அது எந்தளவு முக்கியமானது என்பதை நிரூபிக்கும் வகையிலான தரவுகள் வெளியாகியுள்ளது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகெங்கும் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 4 நாட்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
60 வயதை கடந்தவருக்கு பூஸ்டர் டோஸ் போடனுமா? 'இது கட்டாயமில்லை..' மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
ஓமிக்ரான்
அதேபோல ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் நேற்றைய தினம் 1,270ஆக அதிகரித்துள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு முறை ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
பூஸ்டர் டோஸ்
ஓமிக்ரான் அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வரும் ஜன.10 முதல் வேக்சின் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு, 60 வயதைக் கடந்தவர்களுக்கு மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆர்வமில்லை
பூஸ்டர் டோஸ் குறித்து முன்களப் பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் பெரியளவில் ஆர்வமாக உள்ளதாகத் தெரியவில்லை. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் எந்தளவு முக்கியமானது என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் வெளியாகியுள்ளது. பூஸ்டர் டோஸ் பணிகளை முதலில் ஆரம்பித்த ஒரு சில நாடுகளில் முதன்மையானது பிரிட்டன். அங்கு இதுவரை 2.8 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது. அதாவது பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளத் தகுதியானவர்களில் 10இல் 7 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.
ஊரடங்கு தீர்வல்ல
ஊரடங்கு உள்ளிட்ட தீவிரமான கட்டுப்பாடுகள் பொருளாதாரம் மற்றும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில், வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே மாற்று என அந்நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓமிக்ரான் பரவல் தொடங்கிய போது. பிரிட்டன் நாட்டில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனால் பூஸ்டர் டோஸ் பணிகளை வலியுறுத்திய போரீஸ் ஜான்சன் மீது பலரும் விமர்சித்தனர். இருப்பினும், பூஸ்டர் டோஸ் தான் மருத்துவ உட்கட்டைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைந்துள்ளது.
மிக மிக குறைவு
பிரிட்டனில் கடந்த சில நாட்களாகவே தினசரி 1.80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், அவர்களில் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாகவே உள்ளது. வெறும் 11,452 பேர் மட்டுமே பிரிட்டனில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேக்சின் பணிகள் முழுமையாகத் தொடங்காத போது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
மேலும், புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் போரீஸ் ஜான்சன், "2022ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஒரு ஆண்டாக அமைய வேண்டும் என்றால் அனைவரும் உடனடியாக வேக்சின் எடுத்துக் கொள்ளுங்கள். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் 90% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் போதும் மருத்துவ உதவி தேவைப்படவில்லை. இது பூஸ்டர் டோஸின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துகிறது" என்றார்.
சுகாதார வல்லுநர்கள்
அதேபோல அங்கு கொரோனா வேக்சின் போடாதவர்கள் மத்தியிலேயே கொரோனா உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. பிரிட்டன் நாட்டின் தரவுகள் பூஸ்டர் டோஸ்கள் போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் போடத் தகுதியான நபர்கள் விரைவாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.