கதற கதற 9 பேரை வெளுத்துவிட்ட போலீஸ்! வன்முறையாளர்களுக்கான பரிசாம்! உபி பாஜக எம்எல்ஏ பதிவால் சர்ச்சை
லக்னோ: நுபுர் சர்மா தொடர்பான சர்ச்சையால் உத்தர பிரதேசத்தில் 6 இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் ஒரு அறையில் 9 பேரை வைத்து கதறகதற 2 போலீசார் வெளுத்து வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ டுவிட்டரில் பகிர்ந்து ‛‛வன்முறையாளர்களுக்கு திரும்ப கிடைக்கும் பரிசு'' என பகிர்ந்துள்ளது விவாதப்பொருளாகி இருக்கிறது.
நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் சர்ச்சையால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மதியம் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையானது.
நபிகள் அவதூறு: பதற்றம் தணியாத மே.வ. ஹவுராவில் 144 தடை உத்தரவு- பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு தடை!
உபியில் 304 பேர் கைது
உத்தர பிரதேசம் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாகின. பிரயாக்ராஜில் வாகனங்கள் தீவைக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக மொத்தம் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளவர்களின் 4 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதறகதற வெளுத்து வாங்கிய போலீஸ்
இந்நிலையில் தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் 9 நபர்களை 2 போலீசார் லத்தியால் தாக்குகின்றனர். அந்த நபர்கள் தொடர்ந்து கெஞ்சினாலும் கூட போலீசார் விடாமல் தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
வன்முறையாளர்களுக்கான பரிசு
இந்நிலையில் தான் முன்னாள் பத்திரிகையாளும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகராக இருந்தவரான உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ ஷாலப் மணி திரிப்பாதி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு, வன்முறையாளர்களுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் என பதிவிட்டு இருந்தார்.
விவாதமான வீடியோ
இந்நிலையில் தான் இது விவாதப்பொருளானது. அதாவது ஷாலப் மணி திரிப்பாதி சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பதை குறிப்பிடவில்லை. இருப்பினும் அது கடந்த வெள்ளிக்கிழமை சாரன்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின.
கொதித்தெழுந்த அகிலேஷ் யாதவ்
இதனை சமாஜ்வாதி கட்சி கடுமையாக கண்டித்தது. அந்த கட்சியின் தைீலவரான முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛‛போலீஸ் கஸ்டடி இறப்பில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மனித உரிமைகள் மீறல், தலித் மக்கள் மீதான தாக்குதலில் முன்னிலையில் உள்ளது. இந்த வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கும். இதனால் இதுபோன்ற போலீஸ் நிலையங்கள் பற்றி கேள்விகள் கேட்டு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்'' என்றார். மேலும் இந்த வீடியோ தொடர்பாக சாரன்பூர் மாவட்ட போலீசாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. போலீசார் மறுப்பு தெரிவித்தனர். யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.