அக்னிபாத்: பொதுசொத்தையா சேதப்படுத்துறீங்க.. வன்முறையாளர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கலெக்டர்
லக்னோ: அக்னிபாத்துக்கு எதிரான பேராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சேதமடைந்த பொதுச்சொத்துகளுக்கான இழப்பீட்டை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிப்போம் என உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா கூறியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய முறையிலேயே ஆள்சேர்க்க வேண்டும் என இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
7 ஆண்டுகளில் குறைந்த ராணுவ ஆள்சேர்ப்பு! அக்னிபாத் திட்ட போராட்டக்காரர்களின் பிரச்சனைகள் என்ன?
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறப்போவது இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் கடைப்பிடிப்பு
இருப்பினும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு ரயில் மறியல், சாலை மறியல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லி சிங்கு எல்லையில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். முன்னதாக ஜூன் 17ல் பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. ரயில்கள் தீவைக்கப்பட்டு பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் பஸ்கள் சேதம்
ஜூன் 17 ல் உத்தர பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினர். இந்த போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சில் உத்தர பிரதேச போக்குவரத்து கழகம், வாரணாசி நகர போக்குவரத்து கழகம் ஆகியவற்றுக்கு சொந்தமான 36 பஸ்கள் சேதமடைந்துள்ளன. இதன்மூலம் உத்தர பிரதேச போக்குவரத்து கழகத்துக்கு ரூ.4 லட்சம், வாரணாசி நகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெய்த்புரா மற்றும் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கைது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வன்முறையாளர்களிடம் வசூல்
இந்நிலையில் தான் வாரணாசி மாவட்ட கலெ க்டர் கவுஷல் ராஜ் சர்மா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிரான வன்முறை போராட்டத்தின்போது பொதுசொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிப்போம்'' என கூறியுள்ளார். மேலும், ‛‛வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. இதனால் வன்முறையை கைவிட வேண்டும். வன்முறையை ஊக்குவிக்கும் நபர்களின் பேச்சை கேட்க வேண்டாம். இது உங்களின் எதிர்காலத்தை பாதித்து விடும்'' என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாடல் இதுதான்
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். வன்முறையின்போது பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரச்சனை, வன்முறையை தூண்டும் நபர்களின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதர் தொடர்பான நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்தால் உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் வன்முறையை தூண்டிய நபர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.