'தடுப்பூசி போடாமல் ஊர் சுற்றுகிறார்'.. அகிலேஷ் யாதவை கடுமையாக தாக்கி பேசிய யோகி ஆதித்யநாத்!
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் அங்கு இப்போதே அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

யோகி ஆதித்யநாத்
பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில் உ.பி.யில் பா.ஜ.க இப்போது இருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறிதது மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார். இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவையும், பிரியங்கா காந்தியையும் கடுமையாக தாக்கி பேசினார்.

தடுப்பூசி போடாமல் ஊர் சுற்றுகிறார்
அகிலேஷ் யாதவ் குறித்து பேசிய அவர், ''மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே தடுப்பூசி போடுவேன் என்று அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார். தடுப்பூசி போடாமல் ஊர் சுற்றுகிறார். இவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும்? அகிலேஷ் நமது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களை அவமரியாதை செய்கிறார் அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறார்.

பிரியங்கா காந்தி மீதும் தாக்கு
அரசியலை விட தனக்கும் மற்றவர்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர் பொது மக்களுக்கு என்ன மாதிரியான முன்மாதிரி வைக்கிறார்? இதுபோன்ற தலைவர்களை கேலி செய்ய வேண்டும், மதிக்கக்கூடாது'' என்று யோகி கூறியுள்ளார். பிரியங்கா காந்தி குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், பிரியங்கா இப்போது தேர்தலுக்காக உ.பி.யை சுற்றி வருகிறார்.

சொகுசாக உட்கார்ந்து...
கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு இருந்த வேளையில் உ.பி.யில் பிரியங்கா காந்தியை யாரும் பார்த்தது இல்லை. இப்போது தேர்தளுக்காக சுற்றுலா வந்திருக்கும் அவரை மக்கள் நம்ப தயாராக இல்லை. கொரோனா காலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநிலத்தில் எங்கும் மக்களுக்கு உதவி செய்யவில்லை. வீடுகளில் சொகுசாக உட்கார்ந்து அவர்கள் அரசை குறை கூறினார்கள் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications