வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நிமிடத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய பாஜக வேட்பாளர்.. உபியில் பரபரப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நிமிடத்தில் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பாஜக ஷஷாங் மானி திரிபாதி.
லோக்சபா தேர்தல் தமிழ்நாடு, கேரளாவில் ஒரே கட்டமாக நடந்த நிலையில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடைசிக் கட்டமாக தேவரியா உட்பட 13 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற போகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15 ஆம் தேதியாகும். இந்நிலையில் தேவரியா தொகுதியில் பாஜக சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்திருந்தது.
ஷஷாங் மானி யார் என்றால், உத்தரப்பிரதேசத்தின் மிகபிரபலமான ஐஏஏஸ் அதிகாரியின் பேரன் ஆவார். அவரது தாத்தா சூரத் நரைன் மானி திரிபாதி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர். இதேபோல் ஷஷாங் மானியின் தந்தையான பிரகாஷ் மனி திரிபாதியும் 1996ஆம் ஆண்டில் தேவரியா தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்றவர் ஆவார். தாத்தா, அப்பாவை போல் அரசியல்வாதியாக மாறிய ஷஷாங் மானி , அப்பா வெற்றி பெற்ற தேவரியா தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.
இதையடுத்து ஷஷாங் மானி திரிபாதி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். இதனிடையே உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதகாக அன்றைய தினம் பாஜக வேட்பாளர் ஷஷாங் மானி திரிபாதி சென்றுவிட்டார்.
ஆனால் அந்த விழா நிறைவு பெற தாமதமானது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் புபேந்திர சிங் உள்ளிட்ட கட்சிக்காரர்களையும் கூட்டிக்கொண்டு 100 மீட்டர் தூரம் வரை ஓடோடிச் சென்று கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துள்ளார் ஷஷாங் மானி திரிபாதி. அவர் மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று வேட்பு மனு தாக்கல் செய்த காட்சி இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து ஷஷாங் மானி திரிபாதி பேசுகையில், நான் ஐஐடியில் படித்த காலங்களில் ஓட்டப்பந்தய வீரனாக இருந்தேன். அன்று நான் பயின்ற ஓட்டப்பயிற்சி இன்றைக்கு எனக்கு பெரிதாக உதவியது என்றார்.












Click it and Unblock the Notifications